சனல் – 4 இல் குறிப்பிடப்பட்ட விடயங்கள் தொடர்பில் சர்வதேச விசாரணை தேவை! கர்தினால் மெல்கம் வலியுறுத்து

பிரித்தானியாவின்  ‘செனல் 4 ‘ செய்திச் சேவை வெளியிட்டுள்ள ஆவண தொகுப்பில் வெளியாகியுள்ள, உயிர்த்த ஞாயிறு தின குண்டுத்தாக்குதலின் பின்னணியில் இருந்ததாகக் கூறப்படுகின்ற பாரிய சூழ்ச்சி மற்றும் அதனூடனான சகல விடயங்களும், அதில் குறிப்பிடப்படுகின்ற நபர்கள் தொடர்பிலான விசாரணையொன்று சுயாதீன சர்வதேச விசாரணை குழு ஒன்றின் மூலமாக நடத்தப்பட வேண்டும் என கொழும்பு மறை மாவட்ட பேராயர் மெல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை வலியுறுத்தினார்.

இந்த விசாரணை  சுயாதீனமான முறையில் நடத்தப்பட வேண்டுமானால், இந்த விசாரணைக்கு உட்படுத்தப்படுகின்ற மற்றும் தற்போதும் புலனாய்வு பிரிவுகளைப் போலவே பொலிஸ் திணைக்களங்களில் உயர் பதவிகளில் இருக்கின்ற சகல அதிகாரிகளினது சேவைக்காலம், இந்த விசாரணை முடிவடையும் வரையில் இடைநிறுத்தப்பட‍ வேண்டும் என மேலும் குறிப்பிட்டார்.

தற்போது வெளியாகியுள்ள ‘செனல் 4 ‘ செய்திச் சேவை ஆவணத் தொகுப்பில் வெளியாகியுள்ள விடயங்கள் தொடர்பில் இந்நாட்டு மக்கள் அனைவரும் தங்களது கவனத்தை செலுத்துமாறும் பேராயர் பொது மக்களிடம் கோரிக்கை  விடுத்திருந்தார்.

பிரித்தானியாவின்  ‘செனல் 4 ‘ செய்திச் சேவை வெளியிட்டுள்ள ஆவண தொகுப்பு குறித்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் ஊடக சந்திப்பொன்று கொழும்பு பேராயர் இல்லத்தில் நடைபெற்றது. இதன்போதே  கர்தினால் ஆண்டகை  மேற்கண்டவாறு தெரிவித்தார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.