தேசிய தொழு நோய்த்தடுப்பு இயக்க பிரசன்னத்துடன் விசேட பயிற்சி நெறி

 

நூருல் ஹூதா உமர்

கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையில் தேசிய தொழுநோய் தடுப்பு இயக்கம் மற்றும் கல்முனை பிராந்திய தொற்று நோய் தடுப்பு பிரிவு என்பன இணைந்து தொழுநோய் ஒழிப்பு தொடர்பான விசேட கருத்தரங்கை வியாழக்கிழமை கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையின் கேட்போர் கூடத்தில் ஏற்பாடு செய்திருந்தன.

கல்முனை பிராந்திய தொற்று நோய்த்தடுப்புப் பிரிவின் பொறுப்பு வைத்திய அதிகாரி டாக்டர் எம்.சீ.எம். பஸாலால் இணைப்புச் செய்யப்பட்ட இந்நிகழ்வில் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஐ.எல்.எம் றிபாஸ், தேசிய தொழுநோய் தடுப்பு இயக்கத்தின் பணிப்பாளர் டாக்டர் பிரசாத் ரணவீர, பிரதி பணிப்பாளர் டாக்டர் எம்.பி.ஏ. வாஜித், திட்டமிடல் பிரிவின் பொறுப்பு வைத்திய அதிகாரி டாக்டர் எம்.சீ.எம். மாஹிர் ஆகியோர் கலந்து கொண்டிருந்ததுடன் டாக்டர் டிலினி விஜய சேகர, தோல்நோய் தொடர்பான விசேட வைத்திய நிபுணர் டாக்டர் ஐ.எல்.மாஹில் ஆகியோர் விசேட வளவாளர்களாகவும் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்வில் உரையாற்றிய பணிப்பாளர், தமது குழுவினர் வைத்தியசாலைகளுக்கு மாத்திரமின்றி தனியார் சிகிச்சை நிலையங்கள், மத நிறுவனங்களுக்கும் சமுகமளித்து இது தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தி வருவதாகவும் விசேடமாக வெளி நோயாளர் பிரிவுகளில் இவ்வாறான செயற்பாடுகளை கண்காணிப்பதற்கு விசேட பொறிமுறை வகுக்கப்பட்டுள்ளதாகவும் துண்டு பிரசுரங்கள் மற்றும் சுவரொட்டிகளை அனைத்து நிறுவனங்களுக்கும் விநியோகித்து வருவதாகவும் தொழுநோயை கல்முனை பிராந்தியத்திலிருந்து முற்றாக ஒழிப்பது தனது தலையாயக் கடமை என்றும் தெரிவித்திருந்தார்.

இந்த நிகழ்வில் தெரிவு செய்யப்பட்ட வைத்தியசாலைகளில் இருந்து தொழுநோய் பிரிவுகளில் கடமையாற்றுகின்ற வைத்தியர்கள் பங்குபற்றுநர்களாக பங்குபற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.