இலங்கைத் தொழிலாளர்கள் எதிர்நோக்குகின்ற பிரச்சினைகள் தொடர்பில் விசேட நடவடிக்கை! அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவிப்பு

வெளிநாடுகளில் உள்ள இலங்கைத் தொழிலாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் உள்ளிட்ட அனைத்து விடயங்களையும் துரிதமாகப்  பகிர்ந்து கொள்ளும் வகையில், டிஜிற்றல் முறைமையொன்றை அறிமுகப்படுத்தவுள்ளதாக தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றில் இடம்பெற்ற வாய்மூல விடைக்கான கேள்வி நேரத்தின்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில் –

சுதர்மா நெத்திகுமார வீட்டில் பணிப்பெண்ணாக இருந்து, பொலிஸ் காவலில் உயிரழந்த ராஜகுமாரியின் மரணம் தொடர்பாக தற்போது விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.

நாமும் இந்த விடயம் தொடர்பாக அவதானம் செலுத்தியுள்ளோம். எவ்வாறாயினும், இன்னமும் இந்த மரணம் தொடர்பாக இறுதி அறிக்கை கிடைக்கப்பெறவில்லை. மேலும், சிங்கப்பூரில் உயிரிழந்த பெண் தொடர்பாகவும் நாம் அந்நாட்டிலுள்ள தூதரகத்தின் ஊடாக நடவடிக்கை எடுத்துள்ளோம்.

வெளிநாடுகளில் தொழில்புரிவோருக்கான காப்புறுதிகளை வழங்கும் திட்டமொன்றைத் தற்போது கொண்டுவர நடவடிக்கை எடுத்துள்ளோம். கொரோனா காலகட்டத்தின்போது வெளிநாடுகளில் உள்ள தூதரகங்களில் உள்ள ஊழியர்கள் நாட்டுக்கு அழைக்கப்பட்டார்கள்.

தற்போது அங்கு வெற்றிடங்கள் காணப்பட்டாலும், நாட்டில் நிலவும் பொருளாதாரப் பிரச்சினைகளால் புதிய ஊழியர்களை நியமிக்க முடியாமல் உள்ளது. தூதரகங்களில் ஊழியர் பற்றாக்குறை நிலவுவதால், வெளிநாடுகளில் வேலை செய்வோரின் பிரச்சினைகள் தொடர்பாக ஆராய முடியாத ஒரு சூழல் காணப்படுகிறது.

இதனால்தான் டிஜிற்றல் முறைமையொன்றை அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளோம்.
வெளிநாடுகளில் வேலை செய்வோர் தங்களின் அனைத்து விடயங்களையும் தூதகரங்களுக்கும், கொழும்புக்கும், தங்களின் குடும்பத்துக்கும் இதன் ஊடாக அறிவிக்க முடியும் என்று தெரிவித்துள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.