மட்டக்களப்பில் டெங்குதீவிரம்: 168 வீடுகளில் பரிசோதனை! 47 கிணறுகளில் மீன் குஞ்சுகள் விடப்பட்டன

மட்டக்களப்பு மாவட்டத்தில் பருவமழை பெய்ய ஆரம்பித்திருப்பதால் டெங்கு நோய் தீவிரமாக பரவும் அபாயம் ஏற்பட்டிருக்கிறது. இதனைக் கருத்திற்கொண்டு சுகாதார அமைச்சின் அனுசரணையுடன் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையின் ஏற்பாட்டில் டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் ஜி.சுகுணனின் பணிப்புரையின் பேரில் மட்டக்களப்பு பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் லதாகரனின் வழிகாட்டலில் ஞாயிற்றுக்கிழமை காலை கோட்டைமுனை பிரதேசத்தில் பாரிய டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

இதன்போது ஆறு பிரிவுகளாக சுகாதார பகுதியினர் பிரிக்கப்பட்டு 168 வீடுகளில் டெங்கு பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.

அதேவேளை 47 கிணறுகளில் டெங்கு குடம்பிகளை உண்ணுகின்ற மீன் குஞ்சுகள் விடப்பட்டன.

கோட்டைமுனை சுகாதார பரிசோதகர் ரி.மிதுன்ராஜ்  தலைமையில் சுகாதாரப் பரிசோதகர்கள், மாநகர சபை ஊழியர்கள் மற்றும் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் இப்பரிசோதனை நிகழ்ச்சித் திட்டத்தில் இணைந்திருந்தனர்.

டெங்கு பரவும் இடங்கள் அடையாளப்படுத்தப்பட்டு எச்சரிக்கை விடுக்கப்பட்டதுடன், தேவையற்ற பொருள்கள் மட்டக்களப்பு மாநகர சபை சுத்திகரிப்பு தொழிலாளர்களால் அகற்றப்பட்டன.

இந்த டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகளில் மட்டக்களப்பு மாநகர சபையின் சுகாதார பிரிவினரும் பங்குகொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.