வருடத்துக்கு 500 பில்லியன் ரூபா நஷ்டத்தில் இயங்கும் நிறுவனங்கள் ; நாணய நிதியம் கவலை வெளியிடுட்டுள்ளதாக மஹிந்தானந்த தெரிவிப்பு

தேசிய வருமான வரி திணைக்களம், சுங்க திணைக்களம், மதுவரித்திணைக்களம் ஆகியவற்றிடமிருந்து இவ்வாண்டு எதிர்பார்க்கப்படும் வரி வருமானத்தைப் பெற முடியாத நிலைமை காணப்படுகின்றமை தொடர்பில் சர்வதேச நாணய நிதியதம் கவலை வெளியிட்டுள்ளது.

எனவே இவற்றில் இடம்பெறும் ஊழல், மோசடிகளை இல்லாதொழித்து எதிர்பார்க்கப்படும் வருமானத்தை ஈட்டும் வகையில் முகாமைத்துவத்திலும், சட்டங்களிலும் திருத்தங்கள் மேற்கொள்ளப்படவுள்ளதாக பாராளுமன்றத்தின் தேசிய பொருளாதார மற்றும் பௌதீகத் திட்டங்கள் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவின் தலைவர் மஹிந்தானந்த அழுத்கமகே தெரிவித்தார்.

இம்மூன்று திணைக்களங்களும் வருடத்துக்கு 500 பில்லியன் ரூபா நஷ்டத்திலேயே இயங்கிக் கொண்டிருப்பதாகவும் மஹிந்தானந்த அழுத்கமகே சுட்டிக்காட்டினார்.

ஜனாதிபதி ஊடக மையத்தில் செவ்வாய்கிழமை (26) இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் தெரிவிக்கையில் ,

இவ்வாண்டில் தேசிய வருமான வரி திணைக்களம் 1667 பில்லியன் ரூபாவையும், சுங்கத் திணைக்களம் 1217 பில்லியன் ரூபாவையும், மதுவரித்திணைக்களம் 217 பில்லியன் ரூபாவையும் அதாவது 3101 பில்லியன் ரூபாவை வருமானமாகப் பெறும் என மதிப்பிடப்பட்டிருந்தது.

ஆனால் இதுவரை தேசிய வருமான வரி திணைக்களத்துக்கு 956 பில்லியன் ரூபாவும், சுங்க திணைக்களத்துக்கு 578 பில்லியன் ரூபாவும், மதுவரித்திணைக்களத்துக்கு 109 பில்லியன் ரூபாவும் வரி வருமானம் கிடைத்துள்ளது. அதற்கமைய இவற்றிடமிருந்து ஒட்டு மொத்தமாக 1643 பில்லியன் ரூபா வருமானமாகக் கிடைத்துள்ளது.

கிடைக்கப் பெற்றுள்ள இந்த வருமானத்தில் அடிப்படையில் மதிப்பிடும் போது அரசாங்கத்தால் எதிர்பார்க்கப்பட்ட 3101 பில்லியன் ரூபாவில் 2380 பில்லியன் ரூபா வருமானத்தை மாத்திரமே பெற முடியும் என எதிர்பார்க்கின்றோம்.

இதனால் வரி வருமானத்தில் 637 பில்லியன் ரூபா தட்டுப்பாடு ஏற்படக் கூடும். இந்த மதிப்பீடு தொடர்பில் சர்வதேச நாணய நிதியம் அதன் கவலையை வெளிப்படுத்தியுள்ளது. ஆனால் இந்த நிறுவனங்களிடமிருந்து அரசாங்கம் எதிர்பார்க்கும் வருமானத்தைப் பெற்றுக் கொள்ள முடியும்.

இவை சரியான இலக்குடன் பயணித்தால் எதிர்பார்க்கும் வரியைப் பெற்றுக் கொள்ள முடியும். 22 மில்லியன் சனத்தொகை காணப்படும் இந்நாட்டில் 10 சதவீதமானோர் மாத்திரமே வருமான வரியை செலுத்துகின்றனர். நாட்டில் 105 000 நிறுவனங்கள் காணப்படுகின்றன. அவற்றில் 68 000 நிறுவனங்கள் தொடர்பில் அறிக்கை கிடைக்கப் பெற்றுள்ளது. இவற்றில் 15 சதவீதமானவை மாத்திரமே ஒரு ரூபாவேனும் வரி செலுத்தியுள்ளன. நாட்டின் மொத்த வரி வருமானத்தில் 86 சதவீதமான வரி 494 நிறுவனங்களிடமிருந்தே அறவிடப்படுகின்றன.

வருமான, சுங்க மற்றும் மதுவரி திணைக்களங்களை முறையாக கண்காணித்தால் அரச வருமானத்தை 500 பில்லியன் ரூபாவாக அதிகரிக்க முடியும். தற்போது சுங்க திணைக்களம் நாளொன்று 1 பில்லியன் ரூபா நஷ்டத்திலும் , தேசிய வருமான வரி திணைக்களம் நாளொன்றுக்கு 500 மில்லியன் ரூபா நஷ்டத்திலும், மதுவரி திணைக்களம் நாளொக்கு 10 மில்லியன் ரூபா நஷ்டத்திலும் இயங்குகின்றன. இதன் காரணமாக வருடத்துக்கு 500 பில்லியன் ரூபா நஷ்டத்தை எதிர்கொள்ள வேண்டியிருக்கின்றது.

மதுவரி திணைக்களம் மாதத்துக்கு 45 – 50 மில்லியன் போத்தல் மதுபானத்தை தயாரிக்கின்றனர். வருடத்தின் ஒட்டுமொத்த தயாரிப்பில் 40 சதவீதமானவை வரி செலுத்தாமல் சட்ட விரோதமாக விநியோகிக்கப்படுகின்றன. இதனை தடுப்பதற்காக 2018இல் ஸ்டிக்கர் அறிமுகப்படுத்தப்பட்டது. எனினும் தற்போது சட்ட விரோதமாக அதே போன்ற ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்டு மதுபான போத்தல்கள் விநியோக்கப்படுகின்றன.

இதுவரையில் தேசிய வருமான வரி திணைக்களத்தில் 904 பில்லியன் ரூபா அறவிடப்படாத வரி காணப்படுகின்றது. நீதிமன்ற ஆட்சேபனைகளின் காரணமாக இவ்வாறு பாரியதொரு வரித் தொகை அறவிடப்படாமலுள்ளது. எனவே இவ்வாறான தேக்கங்களைத் தவிர்த்துக் கொள்ளும் வகையிலும், அரச நிறுவனங்களைப் போன்றே தனியார் நிறுவனங்களிடமிருந்தும் நேரடியாக வரி அறவிடும் வகையில் சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்ளவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது என்றார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.