ஊழலிலீடுபட்ட சுகாதார அமைச்சு அதிகாரிகளுக்கு எதிராக அமைச்சர் ரமேஷ் பத்திரண நடவடிக்கை எடுக்க வேண்டும்! காவிந்த ஜயவர்தன வலியுறுத்தல்

முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெலவுடன் இணைந்து ஊழல், மோசடிகளில் ஈடுபட்ட அதிகாரிகளுக்கு எதிராகத் தற்போதைய அமைச்சர் ரமேஷ் பத்திரண சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் காவிந்த ஜயவர்தன வலியுறுத்தினார்.

கொழும்பிலுள்ள எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் வியாழக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனை வலியுறுத்திய அவர் மேலும் குறிப்பிடுகையில் –

முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவுக்கு எதிராக எம்மால் நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட்ட நம்பிக்கையில்லா பிரேரணை தோற்கடிக்கப்பட்டிருந்தாலும், அன்று அதில் நாம் குறிப்பிட்ட காரணிகள் உண்மை என்பது தற்போது நிரூபனமாகியுள்ளது. அது மாத்திரம் போதாது. எம்மால் முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுக்களுடன் தொடர்புடைய அதிகாரிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

அமைச்சர் மாற்றப்பட்டுள்ள போதிலும், அவருடன் இணைந்து ஊழல், மோசடிகளில் ஈடுபட்டுள்ள அதிகாரிகள் எவரும் மாற்றப்படவில்லை. இவர்களுக்கு எதிராக எவ்வாறு சட்ட நடவடிக்கை எடுக்கப் போகிறீர்கள் என்று தற்போதைய சுகாதார அமைச்சர் ரமேஷ் பத்திரணவிடம் கேள்வியெழுப்புகின்றோம். அப்பாவி மக்களின் வரிப்பணமே இவர்களால் மோசடி செய்யப்பட்டுள்ளது.

நாட்டில் 65 ஆயிரத்துக்கும் அதிகமான சிறுவர்கள் மந்த போசனையால் பாதிக்கப்பட்டுள்ளனர் எனத் தகவல்கள் கிடைத்துள்ளன. இவை தொடர்பில் தற்போதைய சுகாதார அமைச்சர் அவதானம் செலுத்த வேண்டும். – என்றார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.