இரு உணவகங்களுக்கு யாழ்ப்பாணத்தில் ‘சீல்’!

யாழ்ப்பாணம் மாநகரில் சுகாதார சீர்கேடு நிறைந்து காணப்பட்ட உணவகமும் சுகாதார பிரிவினரின் அனுமதி பெறாது இயங்கிய உணவகமும் நீதிமன்ற கட்டளையில் சீல் செய்யப்பட்டு மூடப்பட்டன.

யாழ்ப்பாணம் மாநகர் ஆரியகுளம் சந்தி பகுதியில் அமைந்துள்ள பிரபல சைவ உணவகத்தில் வாடிக்கையாளர் ஒருவருக்கு புழுவுடன் உணவு வழங்கப்பட்டுள்ளது.

அது தொடர்பில் பாதிக்கப்பட்டவர் யாழ்ப்பாணம் மாநகர சுகாதார மருத்துவ அதிகாரி பணிமனையினரிற்கு அறிவித்தார். விசாரணைகளை முன்னைடுத்த பொதுச் சுகாதார பரிசோதகர்கள் மாநகர சுகாதார பிரிவினரால் குறித்த உணவகம் பரிசோதிக்கப்பட்டது. உணவகத்தில் சுகாதார சீர்கேடுகளை சீர் செய்ய அறிவுத்தல் வழங்கப்பட்டது.

வெள்ளிக்கிழமை மீண்டும் யாழ்ப்பாணம் மாநகர பொது சுகாதார பரிசோதகர் லயன் பா.சஞ்சீவன் தலைமையிலான குழுவினரால் குறித்த உணவகம் பரிசோதனை செய்யப்பட்டது.

இதன்போது சுட்டிக்காட்டப்பட்ட குறைபாடுகள் எவையும் நிவர்த்தி செய்யப்படாமலே காணப்பட்டது.

அதனால் பொதுச் சுகாதார சட்ட விதிகளின் கீழ் அந்த உணவகத்தின் உரிமையாளர் மீது யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றில் வழக்குத் தொடரப்பட்டது.

யாழ்ப்பாணம் மாநகரில் உரிய அனுமதி பெறப்படாமல் இயங்கிய மற்றோர் உணவகமும் பரிசோதிக்கப்பட்டது. அதுதொடர்பிலும் வழக்குத் தொடரப்பட்டது.

02 உணவகங்களிற்கும் எதிரான வழக்குகள் மேலதிக நீதிவான் நீதிமன்றில் இன்று விசாரணைக்கு வந்தன.

உணவகங்களின் குறைபாடுகள் சீர் செய்யப்பட்டு உரிய அனுமதியளிக்கும் வரை அவற்றை சீல் செய்து வியாபார நடவடிக்கையை இடைநிறுத்த மன்றில் விண்ணப்பம் முன்வைக்கப்பட்டது.

விண்ணப்பத்தை ஆராய்ந்த மேலதிக நீதிவான் இரண்டு உணவகங்களையும் சீல் வைத்து மூடுமாறு பொது சுகாதாரப் பரிசோதகரிற்கு கட்டளையிட்டார்.

பொது சுகாதார பரிசோதகர் பா. சஞ்சீவனால் குறித்த இரு உணவகங்களும் சீல் வைத்து மூடப்பட்டன.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.