பொலிஸாரின் துரித நடவடிக்கையினால் திருட்டுபோன நகை சாவகச்சேரியில் மீட்பு!

சாவகச்சேரிப் பொலிஸாரின் துரித நடவடிக்கை மூலம் பெண் ஒருவரின் சங்கிலியை அறுத்த திருட்டுச் சந்தேக நபர் கைது செய்யப்பட்டிருப்பதுடன் திருட்டுப் பொருள் மற்றும் திருட்டுக்குப் பயன்படுத்திய மோட்டார்சைக்கிள் ஆகியனவும் கைப்பற்றப்பட்டுள்ளன.

இது தொடர்பாக மேலும் தெரியவருவதாவது –

சாவகச்சேரிப் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கச்சாய் வீதிப் பகுதியில் கடந்த 06-11-2023 அன்று நண்பகல் வேளை தனது பிள்ளைகளை பாடசாலையில் இருந்து ஏற்றி வரச் சென்ற பெண் ஒருவருடைய மூன்றரை லட்சம் ரூபா பெறுமதியான இரண்டு பவுண் சங்கிலியை மோட்டார்சைக்கிளில் வந்த சந்தேகநபர் அறுத்துக்கொண்டு தப்பித்திருந்தார்.

இந்நிலையில், இது தொடர்பாக சாவகச்சேரிப் பொலிஸில் மேற்கொள்ளப்பட்ட முறைப்பாட்டை அடிப்படையாகக் கொண்டு விரைந்து செயற்பட்ட பொலிஸார் சி.சி.ரி.வி கேமராவை அடிப்படையாக கொண்டு கிளிநொச்சி வட்டக்கச்சி பகுதியைச் சேர்ந்த 22 வயதான இளைஞன் ஒருவரைக் கடந்த 14 ஆம் திகதி கைது செய்ததுடன் அறுக்கப்பட்ட சங்கிலி, திருட்டுக்கு பயன்படுத்திய மோட்டார் சைக்கிள், திருட்டு தினத்தன்று அணிந்திருந்த உடை ஆகியவற்றையும் பொலிஸார் மீட்டுள்ளனர்.

சந்தேக நபரைக் கடந்த 14 ஆம் திகதி சாவகச்சேரி நீதிமன்றில் முற்படுத்திய நிலையில் எதிர்வரும் 29 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டிருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது. சாவகச்சேரிப் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி பாலித செனவிரட்ன தலைமையிலான பொலிஸ் குழுவினர் மேற்படி கைது நடவடிக்கையை முன்னெடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.