பிரதமர் தினேஷ் குணவர்தனவுடன் சீன தூதுக்குழு சந்தித்துப் பேச்சு!

இலங்கையின் தற்போதைய பொருளாதாரம், அரசியல் உட்பட பல்வேறு விடயங்கள் குறித்து பிரதமர் தினேஷ் குணவர்தனவுடன்  சீன ஜனாதிபதியின் விசேட பிரதிநிதி ஷென் யிகின் உள்ளிட்ட தூதுக்குழுவினர் சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.

மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை  மேற்கொண்டு  நாட்டுக்கு வருகை தந்துள்ள சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங்கின் விசேட  பிரதிநிதி ஷென் யிகின் உள்ளிட்ட தூதுக்குழுவினர் திங்கட்கிழமை அலரி மாளிகையில் பிரதமர் தினேஷ் குணவர்தனவை சந்தித்து கலந்துரையாடினர்.

இலங்கை பாரிய பொருளாதார நெருக்கடிக்கு முகங் கொடுத்திருந்த சந்தர்ப்பத்தில் பொருளாதாரத்தை மீட்டெடுக்க சீனா வழங்கிய ஒத்துழைப்புக்கு நன்றி தெரிவித்த பிரதமர் தினேஷ் குணவர்தன, எதிர்காலத்திலும் அனைத்து சந்தர்ப்பங்களிலும் சீனா உதவும் என நம்புவதாகக் குறிப்பிட்டார்.

மேலும் பொது மற்றும் தனியார் முதலீடுகள், உற்பத்திப் பொருள்களின் ஏற்றுமதிக்கு,  புதுப்பிக்கத்தக்க ஆற்றல், தகவல் தொழில்நுட்பம், கல்வி,  உட்கட்டமைப்பு வசதிகள், பொருளாதாரப் பிரச்சினைகளுக்கு நீண்டகால தீர்வுகளை வழங்குவதற்கான சீனாவின் ஆதரவு இலங்கைக்கு மட்டுமல்லாமல் மற்ற நாடுகளுக்கும் நம்பிக்கை அளித்துள்ளதாகத் தெரிவித்த பிரதமர், இலங்கையின் கடன் மறுசீரமைப்பு சீனா ஆதரவு வழங்கியமையை இதன்போது நினைவுகூர்ந்தார்.

இதற்குப் பதிலளித்த  விசேட பிரதிநிதி ஷென் யிகின், சீனா இலங்கையை நீண்ட கால நட்பு நாடாகவே கருதுகிறது. ஒத்துழைப்புகளை விரிவுபடுத்தவும், புதிய திட்டங்களில் முதலீடு செய்யவும், கொழும்பு துறைமுக நகரம், அம்பாந்தோட்டை துறைமுகம், வறுமை ஒழிப்பு வேலைத்திட்டம், கல்வி மற்றும் விவசாயம் என்பற்றை விரிவாக்கம் செய்யவும் எதிர்பார்த்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

மேலும் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் இலங்கையின் முன்னேற்றத்தைக் கண்டு சீனா மகிழ்ச்சியடைவதாகக் கூறிய அவர் , நெருக்கடிகளிலிருந்து மீண்டெழ இலங்கை முன்னெடுக்கும் முயற்சிகளுக்கு சீனாவின் தொடர்ச்சியான ஆதரவு எப்போதும் இருக்கும் எனவும் குறிப்பிட்டார். இலங்கையின் சுதந்திரம் சுயாதீன தன்மை மற்றும் இறையாண்மை பேணி செல்ல தொடர்ந்தும் சீனா துணை நிற்கும் எனவும் உறுதியளித்தார்.மேலும் இலங்கைக்கும் சீனாவுக்கும் இடையில் காணப்படும் நீண்ட கால உறவு மேலும் வலுப்படுத்தப்பட  வேண்டும் என வலியுறுத்திய அவர், அதை கட்டியெழுப்ப சீனா உதவும் எனவும் குறிப்பிட்டார்

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்