கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி அகழ்வை நீண்ட காலம் முன்னெடுக்க வேண்டி ஏற்படுமாம்! ஜனாதிபதி சட்டத்தரணி சுமந்திரன் தெரிவிப்பு

கொக்குத்தொடுவாயில் வீதிக்கு குறுக்காகவும், வீதிக்கு அடியிலும் கூட சில வேளை மனித எச்சங்கள் இருக்கக் கூடும் என்ற சந்தேகமும் ஏற்பட்டிருக்கின்றது என ஜனாதிபதி சட்டத்தரணியும் நாடாளுமன்ற உறுப்பினருமாகிய எம் .ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.

கொக்குதொடுவாய் மனித புதைகுழி அகழ்வு பணி ஆரம்பிக்கும் இடத்தைப் பார்வையிட்டதன் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையிலே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில் –

கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி அகழ்வு பணி மீளவும் திங்கட்கிழமை காலை ஆரம்பமாகி இருக்கின்றது.

தற்போது விடுவிக்கப்பட்டிருக்கின்ற நிதியை வைத்து இன்னும் இரண்டு வாரங்களுக்கு அகழ்வை மேற்கொள்ள முடியும் எனக் கூறியிருக்கிறார்கள்.

இது பல்வேறு தளங்களிலே உடல்கள் காணப்படுகின்ற காரணத்தாலே நீண்ட காலமாக இதனைச் செய்வதற்கான தேவை ஏற்பட்டிருப்பதைத் தற்போது உணர்ந்திருக்கின்றார்கள்.

அது ஒரு பக்கம் இருக்க வீதிக்கு குறுக்காகவும், வீதிக்கு அடியிலும் கூட சில வேளை மனித எச்சங்கள் இருக்கக்கூடும் என்ற சந்தேகமும் ஏற்பட்டிருக்கின்றது.

ஆகையினாலே இதனை வருகின்ற நாள்களிலே பரிசீலித்து நீண்ட நாள்களாக செய்யப்பட வேண்டிய செயன்முறை என்ற அடிப்படையிலே அதற்கான நிதியை ஜனாதிபதி செயலகத்திலே இருந்து, அரசாங்க அதிபருக்கு அதனை விடுவிப்பதற்கான முயற்சிகள் இன்றிலிருந்து
(கடந்த திங்கட்கிழமை) ஆரம்பமாக இருப்பதாகவும் அந்த நிதி விடுவிக்கப்படும் என்று கூறப்பட்டிருக்கின்றது.

ஆகையினாலே இந்த செயற்பாடுகள் தற்போது சரியான முறையிலே நடைபெறுகின்றன.

ஒவ்வொரு உடல்களும் கை, கால், உடம்பு, தலை அனைத்தும் பொருந்தக்கூடிய வண்ணமாக எடுக்கப்படுகின்ற காரணத்தால்தான் நீண்ட நேரம் இதற்கு செல்வாகின்றது. உடையாமல் கவனமாக எடுக்கப்பட வேண்டிய தேவையும் இருக்கின்றது.

ஆகையினால் ஒவ்வொரு கட்டமாக அகழ்ந்து தற்போது 17 உடலங்கள் முழுமையாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன. ஆனால் இதனை விட கூடுதலான எண்ணிக்கை இருக்கும் என்பது தெளிவாகத் தெரிகின்றது. அவர்களுடைய சீருடைகள் மற்றும் வேறு பல பொருள்களும் அடையாளம் காணப்பட்டிருக்கின்றன.

ஆகையினாலே எந்த காலத்தில் நிகழ்ந்திருக்கலாம் என்பதையும் சில பரிசோதனைகளின் பின்னர் அறியக்கூடியதாக இருக்கும் என்ற நம்பிக்கை தெரிவிக்கப்பட்டிருக்கின்றது. அதற்கு சில நாள்கள் எடுக்கும் என மேலும் தெரிவித்தார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.