கல்முனை சீர்திருத்த பாடசாலையில் மர்மமான முறையில் சிறுவன் மரணம்! சந்தேகம் வெளியிடும் பெற்றோர்

மட்டக்களப்பு கொக்குவில் பகுதியை சேர்ந்த ஆனந்ததீபன் தர்சான்ந் எனும் 15 வயது மதிக்கத்தக்க சிறுவன் ஒருவன் கல்முனை சீர்திருத்த பாடசாலையில் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார் என சிறுவனின் தந்தை தெரிவித்துள்ளார்.

கடந்த நவம்பர் 17ஆம் திகதி மணியொன்றை திருடிய குற்றச்சாட்டின் பேரில் கொக்குவில் பொலிஸாரால் கைது செய்யப்பட்ட இந்த சிறுவன், நீதிமன்ற உத்தரவின் பிரகாரம், அன்றைய தினமே கல்முனை சீர்திருத்த பாடசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

இந்தச் சிறுவன் கடந்த புதன்கிழமை (நவ. 29) அதிகாலை 3.30 மணிளவில் உயிரிழந்துவிட்டார் என சிறுவனின் குடும்பத்தாருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

அதனைத் தொடர்ந்து, தனது மகனின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாகவும் மகன் காயங்களுடன் உயிரிழந்துள்ளதாகவும் சிறுவனின் தந்தை தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், சிறுவனின் சடலம் கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் சிறுவனது மரணம் தொடர்பான விசாரணை அறிக்கையையும் சட்ட வைத்திய அறிக்கையையும் தங்களுக்கு வழங்க வேண்டும் என்றும் தனது மகனின் மரணத்தில் பல விதமான பொய் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படுகின்றன எனவும் சிறுவனின் தந்தை மேலும் தெரிவித்துள்ளார்.

மிகவும் வறுமைக் கோட்டின் கீழ் வாழும் சிறுவனின் குடும்பத்தினர், தங்களது பிள்ளைக்கு ஏற்பட்ட நிலை வேறு யாருக்கும் நேரிடக்கூடாது என்றும் தங்களது பிள்ளையின் மரணத்தில் ஒரு நீதியான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் தெரிவித்துள்ளனர்

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.