பொதுநிதி செலவினத்துக்கு பொறுப்புக்கூறாத இராணுவம் மனித உரிமை மீறலுக்கு எப்படி பொறுப்புக்கூற வைப்பது? அம்பிகா சற்குணநாதன் கேள்வி

இராணுவத்தினரால் மேற்கொள்ளப்படும் பொது நிதிசார் செலவினங்கள் தொடர்பில் பொறுப்புக்கூறல் உறுதிப்படுத்தப்படாத நிலையில், மனித உரிமை மீறல்கள் தொடர்பில் அவர்களை எவ்வாறு பொறுப்புக்கூறவைக்க முடியும் என சித்திரவதைகளால் பாதிக்கப்பட்டோருக்கான ஐக்கிய நாடுகள் நிதியத்தின் உறுப்பினர் அம்பிகா சற்குணநாதன் கேள்வி எழுப்பியிருக்கின்றார்.

போர் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டதன் பின்னரும் கல்வி மற்றும் சுகாதாரத்துறையுடன் ஒப்பிடுகையில் பாதுகாப்பு அமைச்சுக்கு அதிக நிதி ஒதுக்கப்பட்டுவருவது குறித்து பல்வேறு தரப்பினராலும் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டுவரும் நிலையில்,  2024ஆம் ஆண்டுக்கான வரவு, செலவுத் திட்டத்தில் பாதுகாப்புத்துறைக்கு 423 பில்லியன் ரூபா நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

அதாவது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 6.5 சதவீதமாகக் கணிக்கப்பட்டிருக்கும் இந்நிதி ஒதுக்கீடு தொடர்பில் பல்வேறு விமர்சனங்கள் எழுந்துள்ளன. இவ்வாறானதொரு பின்னணியில் இவ்விடயத்தை மேற்கோள் காட்டி தனது உத்தியோகபூர்வ எக்ஸ் தளத்தில் (ருவிட்டர்) செய்திருக்கும் பதிவிலேயே அம்பிகா சற்குணநாதன் மேற்கண்டவாறு சுட்டிக்காட்டியுள்ளார்.

அப்பதிவில் அவர் மேலும் கூறியிருப்பவை வருமாறு –

இலங்கை கடற்படை மற்றும் விமானப்படை ஆகியவற்றின் 2022 ஆம் ஆண்டுக்கான கணக்காய்வு அறிக்கை இலங்கை இராணுவத்தின் கணக்காய்வு அறிக்கையைப் போன்று நிதி முறையற்ற விதத்தில் முகாமை செய்யப்பட்டிருப்பதைக் காண்பிக்கின்றது.

இருப்பினும் நாடு பொருளாதார நெருக்கடிக்கு முகங்கொடுத்திருக்கும் சூழ்நிலையில் படையினரால் பொதுநிதி முறையற்ற விதத்தில் கையாளப்படுவது தொடர்பாகத் தெற்கில் இயங்கிவரும் எந்தவொரு அரசியல் கட்சியும் பேசவில்லை.

நிதியியல்சார் பொறுப்புடைமை குறித்துப் பேசுகின்ற நாடாளுமன்ற உறுப்பினர்களான ஹர்ஷ டி சில்வா, எரான் விக்ரமரத்ன போன்றோர் இவ்விடயம் தொடர்பிலும் குரலெழுப்ப வேண்டும் என்று நாம் எதிர்பார்க்கின்றோம்.

தற்போது இராணுவம் சட்டத்துக்கு அமைவாக செயற்படாமல், பொது நிதியை தமது விருப்பத்துக்கு ஏற்ப செலவிடும் கட்டமைப்பாக எழுச்சியடைந்துள்ளது.

இருப்பினும் அது உரியவாறு கண்காணிப்புக்கு உட்படுத்தப்படவில்லை. அதேபோன்று தமது வாக்கு வங்கிக்கு பாதிப்பு ஏற்படக்கூடும் என்பதால் தெற்கில் இயங்கிவரும் அரசியல்வாதிகளும் அது தொடர்பில் பேச முற்படவில்லை.

குறைந்தபட்சம் பொது நிதியில் மேற்கொள்ளப்படும் செலவினங்கள் தொடர்பில் கூட இராணுவத்தை பொறுப்புக்கூறச் செய்ய முடியவில்லை என்றால், மனித உரிமை மீறல்கள் தொடர்பில் அவர்களைப் பொறுப்புக்கூறவைக்க முடியும் என்பதற்கான சாத்தியப்பாடு எங்கே இருக்கின்றது?

சட்டங்களுக்கு அமைவாக செயற்படுகின்ற சமூகத்தைக் கட்டியெழுப்ப வேண்டுமெனில், இராணுவத்தினரைப் பொறுப்புக்கூறச் செய்வதைத் தவிர்க்கமுடியாது எனத் தெரிவித்திருந்தார்

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.