குற்றங்களை 50 வீதமாக குறைக்க எம்மால் முடியும் தேசபந்து தென்னக்கோன் சபதம்

குற்றங்கள் பாரியளவில் குறைவடைந்துள்ளன. தற்போதைய சுற்றிவளைப்புகளை விஸ்தரிக்கும் பட்சத்தில் 6 மாதங்களில் குற்றங்களை 50 வீதமாகக் குறைக்க முடியும் என பதில் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னக்கோன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிட்டவை வருமாறு –

பாரியளவில் போதைப்பொருள்கள் கைப்பற்றப்பட்டன எனக் கூறப்பட்ட போதிலும், நெத்தலிகளே கைது செய்யப்படுகின்றன எனக் குற்றஞ்சாட்டப்படுகின்றது. அந்த கருத்தில் ஓர் உண்மையும் இருக்கிறது. நெத்தலிகள் போதைப்பொருளுடன் வீதிக்கு இறங்கும்போதே அவர்களை கைது செய்ய பொலிஸாரும் நடவடிக்கை எடுக்கின்றனர். அவர்களை அவ்வாறே விட்டுச் செல்ல முடியாதல்லவா? சிறிய மீன்களை பிடித்ததன் பின்னர், பாரிய மீன்களை இலகுவாக எம்மால் கண்டுபிடிக்க முடியும். அந்த நாள் வெகு தொலைவில் இல்லை.

போதைப்பொருள் பாவனையாளர்களும் போதைப்பொருள் வர்த்தகர்களும் இருவேறு தரப்பினர் அல்லர். கடந்த 17ஆம் திகதியின் பின்னரும் அதற்கு முன்னரும் உள்ள நிலைமையும் நான் அவதானித்தேன். குற்றங்கள் பாரியளவில் குறைவடைந்துள்ளன. தற்போதைய சுற்றிவளைப்புகளை விஸ்தரிக்கும் பட்சத்தில் 6 மாதங்களில் குற்றங்களை 50 வீதமாகக் குறைக்க முடியும். நாம் கண்டறிந்துள்ள 1,091 போதைப்பொருள் கடத்தல்காரர்கள் முழு நாட்டிலும் இருக்கின்றனர். இவர்கள் காலையில் குற்றங்களை செய்துவிட்டு இரவில் போலி கடவுச்சீட்டு மூலம் வெளிநாடு செல்கிறார்கள். காலையில் கொலை செய்துவிட்டு இரவில் வெளிநாட்டுக்கு செல்லும் முறைமை ஜனவரியிலிருந்து மாற்றமடையும். ஜனவரி மாதம் அவர்கள் விமான நிலையத்தில் கைது செய்யப்படுவார்கள்.

மேலும், 31 பாதாள குழு உறுப்பினர்கள் சிறைச்சாலையில் இருந்து குற்றங்களை வழிநடத்துகின்றனர். இவர்களையும் கட்டுப்படுத்தும் வேலைத்திட்டங்களும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. சாதாரண மக்களுக்கு எதிராகவோ அல்லது பொலிஸாருக்கு எதிராகவோ பாதாளக் குழு உறுப்பினர்கள் ஆயுதங்களை ஏந்தி செயற்படும்போது அவர்களுக்கு பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் தகுந்த பாடம் புகட்டப்படும். – என்றார்

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.