மன்னாரில் டெங்கு பரவல் உச்சம் ; இந்த மாதம் 88 நோயாளிகள்! வைத்திய கலாநிதி த.விநோதன் எச்சரிக்கை

மன்னாரில் கழிவுகளை அகற்றல் செயன்முறை ஸ்தம்பிதம் அடைந்துள்ளமையினாலும் மழையுடனான காலநிலை காரணமாக டெங்கு அபாயம் அதிகரித்துள்ளதன் காரணமாக  பொதுமக்கள் அவதானமாக செயல்படுவதுடன்  டெங்கு அறிகுறிகள் காணப்படும் பட்சத்தில் வைத்தியசாலையில் தங்கி சிகிச்சை பெறுமாறு மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் த.விநோதன் கோரிக்கை விடுத்துள்ளார்.

மன்னாரில் வைத்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே இவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில் –

நாடளாவிய ரீதியில் தற்போது டெங்கு நோயினுடைய தாக்கம் அதிகரித்துள்ளது. முழு இலங்கையையும் எடுத்துக் கொண்டால் 80 ஆயிரத்துக்கு மேற்பட்ட டெங்கு நோயாளர்கள் இந்த ஆண்டில் பதிவாகியுள்ளனர்.

மன்னார் மாவட்டத்தைப் பொருத்தவரையில் கடந்த ஜனவரி முதல் நவம்பர் வரை 111 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.

அதேவேளை  டிசெம்பர் மாதத்தில் மட்டும் இதுவரையில் 88 நோயாளர்கள் பதிவாகியுள்ளனர். குறிப்பாக இந்த நோயாளர்களில் பலர் கொழும்பு கண்டி மற்றும் யாழ்ப்பாணம் பகுதிகளுக்கு சென்று வந்தவர்களாவர்.

குறிப்பாக விடத்தல் தீவு மற்றும் மன்னார் நகரத்தின் சில பகுதிகளிலும் பேசாலை பகுதிகளிலும் அதிகளவான டெங்கு தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

டெங்கு நோயைப் பொறுத்தவரையில் சாதாரண டெங்கு காய்ச்சல், குருதி பெருக்குடனான டெங்கு காய்ச்சல் என இருவகையான டெங்கு காய்ச்சல்கள் நிலைமைகள் உருவாகலாம்.

எது எவ்வாறாக இருக்கின்ற போதும் டெங்கு காய்ச்சலினுடையதும், குருதிப் பெருக்குடனான காய்ச்சலினுடையதும் ஆரம்ப அறிகுறிகளாக நெற்றி பொட்டை அண்டிய தலையிடி, கண்ணின் பின்புறம் நோவு,  சிலருக்கு தொண்டை நோவு, தசை நோவு சிலருக்கு வயிற்றில் நோவு போன்ற அறிகுறிகள்  காணப்படும்.

எவ்வாறு இருப்பினும் டெங்கு குருதி பெருக்குடனான காய்ச்சலாக மாற்றமடையும் சந்தர்ப்பத்தில் அவர்கள் அதிக களைப்படைந்தவர்களாக உடல் பகுதியில் குளிர்ந்தும் வலது பக்க வயிற்றின்  மேல் பகுதி நோவுடனும் காணக்கூடியதாக இருக்கும்.

இவர்கள்  இரத்தக் கசிவு என்ற நிலைக்கு உள்ளாகின்ற போது அபாயகரமான கட்டத்தை அடைகிறார்கள்.

இந்த கசிவு என்பது எமது குருதி நாடிகளில் இருந்து பிரிந்து செல்கின்ற குருதி மைத்துளை குழாய்களூடாக அதிகளமான நீர்பாயம் கலங்களுக்கும் குருதி மைத்துளைகளுக்கும் இடையில் வெளியேறுவதால் ஏற்படுகிறது.

இந்த கசிவு நிலை ஏற்படுகின்ற போது உடலில்  அதிர்ச்சி நிலை ஏற்படும். இந்த அதிர்ச்சி நிலைமை காரணமாக உடலினுடைய குருதி அமுக்கம்  குறையும், மூளை இருதயம் போன்றவற்றுக்கு செல்கின்ற குருதியின் அளவு குறையும் இது சிலவேளை மரணத்தை ஏற்படுத்தும்.

அதே நேரம் இவ்வாறு வெளியே செல்கின்ற நீர்பாயம்  மீண்டும் உள் வருவதற்கான தன்மை காணப்படுகின்ற போது அந்த அலர்ஜி காரணமாக அதிகமாக வெளியேறிய குருதி மயிர்த்துளை குழாய்களினுடைய துவாரங்கள் மூடுவதன் காரணமாக வெளியேறி திரவம் சில சந்தர்பங்களில் மீண்டும் உள்ளே வர முடியாத நிலை ஏற்படும்.

அவ்வாறு ஏற்படுகின்றபோது அவர்கள் இதயம் சுற்றும் மென்சவ் அலர்ஜி சுவாசப்பை அலர்ஜி மற்றும் மூளை வீக்கம் போன்றவற்றால் பாதிக்கப்பட்டு மரணம் அடையக் கூடிய சாத்தியம் இருக்கின்றது.

ஆகவே இந்த டெங்கு குருதி பெருக்குடன் காய்ச்சல் நோயாளிகள் கட்டாயமாக வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற வேண்டும்.

அவர்களுடைய குருதியின் சிறுதட்டுக்கள் எண்ணிக்கை குறைவடையும். ஆனால் குருதி சிறு தட்டுக்கள் உடைய எண்ணிக்கை  ஒரு லட்சத்தையும் விட குறைவடைவதற்கு முன்பதாக சிலருக்கு கசிவு நிலை ஏற்படலாம்.

ஆகவே  சில குணங்குறிவுகளை  அடிப்படையாகக் கொண்டு உடலில் அதிகளவு களைப்பு, வயிற்றில் நோவு, தொடர்ந்து சத்தி, இப்படியான குணங்குறிகள் இருப்பின் அவர்கள் கட்டாயம் வைத்தியசாலையில் தங்கி இருந்து சிகிச்சை பெற வேண்டும்.

அவர்களுக்கு வழங்கப்படும் திரவமானது அவர்களுடைய உடலுக்கு தேவையானதும் சரியானதுமான அளவில் கொடுக்கப்பட வேண்டும். அதிகமாகவும் வழங்கக்கூடாது.  குறைவாகவும் வழங்கக் கூடாது. அது வைத்தியசாலையில் தான் சரியான முறையில் அளவிட்டு தீர்மானிப்பார்கள். ஆகவே அவர்கள்  வைத்திய சாலையில் தங்கியிருந்து சிகிச்சை பெறுவது கட்டாயமாகும் எனத் தெரிவித்துள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.