பிரபல போதைப்பொருள் வர்த்தகரின் ஹோட்டல் கொழும்பு-தெஹிவளை பகுதியில் அகற்றப்பட்டது

பிரபல போதைப்பொருள் வர்த்தகர் ஒருவருக்குச்  சொந்தமான கொழும்பு  தெஹிவளை பகுதியில் அமைந்துள்ள ஹோட்டலொன்று  சட்டவிரோதமான  முறையில் நிர்மாணிக்கப்பட்டுள்ளதாக அடையாளம் காணப்பட்டதையடுத்து பொலிஸாரால் திங்கட்கிழமை அதனை அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது.

இதனிடையே கடலோர பாதுகாப்பு திணைக்கள அதிகாரிகளின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்த ஹோட்டலின் பணிப்பாளர் உட்பட  மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தெஹிவளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கடற்கரையோர பகுதியில் அமைந்துள்ள ஹோட்டலொன்று  தற்போது வெளிநாட்டில் தலைமறைவாக இருக்கும் பிரபல போதைப்பொருள் வர்த்தகரான ஷிரான் பாசிக்கு சொந்தமானது என அடையாளம் காணப்பட்டுள்ளது.

அதற்கமைவாக  விசாரணை மேற்கொண்ட பொலிஸார் குறித்த ஹோட்டல்  கடலோர பாதுகாப்பு சட்டங்களை மீறி சட்டவிரோதமான முறையில் போலி ஆவணங்களைப் பயன்படுத்தி நிர்மாணிக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

இதனை தொடர்ந்து பொலிஸார்,  கடலோர பாதுகாப்பு மற்றும் கரையோர வள முகாமைத்துவ திணைக்களத்தின் அதிகாரிகளால்  பெக்கோ  இயந்திரங்களைக் கொண்டு  அகற்றுவதற்கு  நடவடிக்கை எடுக்கப்பட்டது.

இதனிடையே கடலோர பாதுகாப்பு திணைக்கள அதிகாரிகளின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்த ஹோட்டலின் பணிப்பாளர் உட்பட  மூவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும், குறித்த போதைப்பொருள் வர்த்தகர் தொடர்பில் பொலிஸ் சட்டவிரோத சொத்து குவிப்பு பிரிவினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.