மக்கள் பொறுமையாக இருந்தால் பொருளாதாரத்தை எம்மால் ஸ்திரநிலைமைக்குக் கொண்டுவர முடியுமாம்!  அகிலவிராஜ் காரியவசம் கூறுகின்றார்

வற்வரி அதிகரிப்பு குறுகிய காலத்துக்காகும் மக்களுக்கு விரைவாக நிவாரணம் வழங்குவதாக ஜனாதிபதி உறுதியளித்திருக்கிறார். அதனால் வீழ்ச்சியடைந்திருக்கும் பொருளாதாரத்தை ஸ்திரநிலைக்குக் கொண்டுவர சிறிது காலத்துக்கு அனைத்து மக்களும் சற்று பொறுமையாக இருக்க வேண்டும் என ஐக்கிய தேசிய கட்சியின் உப தலைவர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்தார்.

ஐக்கிய தேசிய கட்சி தலைமையகமான சிறிகொத்தவில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில் –

வற்வரி அதிகரிப்பால் பொருளாதார ரீதியில் மக்களுக்கு பாரிய கஷ்டம் ஏற்பட்டிருக்கிறது. என்றாலும் இந்த வற் வரி அதிகரிப்பு குறுகிய காலத்துக்காகும். மக்களுக்கு விரைவாக நிவாரணம் வழங்குவதாக ஜனாதிபதி உறுதியளித்திருக்கிறார். அதேநேரம் அத்தியாவசிய பொருள்களுக்கு இந்த வற்வரி அதிகரிக்கப்படவில்லை.

குறிப்பாக கல்வி, சுகாதார துறை சார்ந்த பொருள்களுக்கு இந்த வரி அதிகரிக்கப்படவில்லை. அத்துடன் 15 வீதமாக இருந்ததை தற்போது 18 வீதமாக அதிகரித்திருக்கிறோம். ஏற்கனவே வரி விலக்களிக்கப்பட்டிருந்த ஒரு சில பொருள்களுக்கே தற்போது 18வீத வரி அதிகரிக்கப்பட்டிருக்கிறது.

மேலும் பல வருடங்களுக்குப் பின்னர் அரசாங்கத்தின் அனைத்து கொடுப்பனவுகளும் கடந்த டிசெம்பர் 31 ஆம் திகதிக்குள் கொடுத்து முடிப்பதற்கு திறைசேரிக்கு இம்முறை முடியுமாகி இருந்துள்ளது. பணம் அச்சிடாமலே இதனை செய்ய முடியுமாகி இருக்கிறது. ஜனாதிபதியின் சிறந்த நிதி முகாமைத்துவமே இதற்குக் காரணமாகும். கடந்த காலங்களில் பணம் அச்சிட்டே மக்களுக்கு நிவாரணம் வழங்கப்பட்டு வந்தது. அதனால் நாட்டின் பணவீக்கம் அதிகரித்தது.

ஆனால் ஜனாதிபதி சரியான முறையில் நடவடிக்கைகளை முன்னெடுக்கும்போது மக்களுக்கு கஷ்டம் ஏற்படும். என்றாலும் குறுகிய காலத்துக்கு இதனைப் பொறுத்துக்கொண்டால் எதிர்காலம் சுபீட்சமாக  அமையும்.அதற்காகவே வற்வரி அதிகரிக்கப்பட்டிருக்கிறது. பெப்ரவரி மாதமாகும்போது  மின் கட்டணத்தை குறைக்க இருக்கிறது.  அதேநேரம் பொருட்களின் விலையும் குறைவடையும்.

அத்துடன் வீழ்ச்சியடைந்திருக்கும் பொருளாதாரத்தைக் கட்டியெழுப்ப வேறு மாற்று வழி இல்லாததாலேயே ஜனாதிபதி இந்த வழியில் செல்கிறார்.வேறு மாற்று வழி இருந்தால் இதனை விமர்சிப்பவர்கள் அதனைத்; தெரிவிக்க வேண்டும்.அதனால் மக்கள் இவர்களின் பொய் பிரசாரங்களை ஏற்றுக்கொண்டு செயற்பட்டால் நாடு அழிவின்பால் சென்றுவிடும்.

அவ்வாறான நிலை ஏற்பட்டால் அதற்கான பொறுப்பை நாங்கள் ஏற்றுக்கொள்ளப்போவதில்லை. அதனால் வீழ்ச்சியடைந்திருக்கும் பொருளாதாரத்தை ஸ்திரநிலைக்கு கொண்டுவர ஜனாதிபதி பாரிய முயற்சிகளை மேற்கொண்டுவருகிறார். எனவே, இதன்போது ஏற்படுகின்ற கஷ்டங்களை குறுகிய காலத்துக்கு அனைத்து மக்களும் பொறுத்துக்கொள்ள வேண்டும். – என்றார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.