திருமலை மாவட்டத்தின் அனைத்து தெரிவுகளையும் மீளநடத்த வேண்டும்;! சம்பந்தன் கிடுக்குப்பிடி என்கிறார் சிறீதரன்

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் திருகோணமலை மாவட்டத்துக்கான கிளைகளின் அத்தனை உறுப்பினர்கள் தெரிவையும் மீண்டும் புதிதாக முன்னெடுக்க வேண்டும் என்று கட்சித் தலைவர் மாவை சோ.சேனாதிராசாவிடத்தில் சம்பந்தன் வலியுறுத்தியுள்ளார் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதேநேரம், கிழக்கு மாகாணத்துக்கு விஜயம் செய்துள்ள கட்சியின் தலைமை வேட்பாளர்களின் ஒருவரான சிவஞானம் சிறீதரன் சனிக்கிழமை முதல் மட்டக்களப்பில் பிரசார நடவடிக்கைளை ஆரம்பித்துள்ளார்.

இந்த விடயம் சம்பந்தமாக மேலும் தெரியவருவதாவது –

இலங்கைத் தமிழரசுக்கட்சியின் புதிய தலைமைக்கான தெரிவு எதிர்வரும் 21ஆம் திகதி திருகோணமலையில் நடைபெறவுள்ளதோடு, வருடாந்த மாநாடு 28 ஆம் திகதி நடைபெறவுள்ளதாகவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், அதற்கு முன்னதாக நடைபெற்ற கட்சியின் மூலக்கிளை மற்றும் தொகுதிக்கிளை தெரிவுகளின்போது திருப்தியற்ற நிலைமைகள் நிலவுவதாகக் குறிப்பிட்டு அக்கட்சியின் சிரேஷ்ட தலைவரான சம்பந்தன் மாவை சோ.சேனாதிராஜாவுக்கு கடிதமொன்றை அனுப்பியிருந்தார்.

அத்துடன், குறித்த தெரிவுகளின் போது வெளிப்படைத்தன்மை இல்லை மற்றும் திட்டமிட்ட வகையில் புறக்கணிப்பு இடம்பெற்றுள்ளது என்பதையும் கூட்டிக்காட்டியிருந்த அவர் விசாரணைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்தியிருந்தார்.

இதற்கு அமைவாக சீனித்தம்பி யோகேஸ்வரன் தலைமையில் விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாக தீர்மானிக்கப்பட்டபோதும், தொடர்ச்சியாகக் காலம் தாழ்த்தப்பட்ட நிலையில் கடந்த மாதம் 17 ஆம் திகதி விசாரணைக்குழு திடீரென்று கூடி விசாரணைகளை முன்னெடுத்ததாக அறிவிக்கப்பட்டது.

எனினும், குறித்த விசாரணைக்குழு கூடியபோது, அதன் தலைவர் சீனித்தம்பி யோகேஸ்வரன் விசாரணைக்குழுவில் பங்கேற்றிருக்கவில்லை. அவர் தலைமைத்துவ வேட்பாளராக இருப்பதால் விசாரணைக்குழுவில் பங்கேற்க முடியாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அந்தத் தீர்மானம் யாரால் எப்போது எடுக்கப்பட்டது என்பது சம்பந்தமாக எந்தவிதமான தெளிவுபடுத்தல்களும் இதுவரையில் வழங்கப்படவில்லை என்று தெரிவிக்கப்படுகின்றது.

அதேநேரம், முன்னெடுக்கப்பட்ட விசாரணையின் முடிவு சம்பந்தமாகவும் எவ்வித வெளிப்படுத்தல்களும் செய்யப்படவில்லை. அத்தோடு குறித்த விசாரணை இடம்பெற்றமை, அதற்கு மறுதினம் திருகோணமலையில் அரசியல்குழு கூடியமை சம்பந்தமாக அம்மாவட்டத்தின் நாடாளுமன்ற உறுப்பினராகவுள்ள சம்பந்தனுக்கு அறிவிக்கப்படவில்லை என்றும் சம்பந்தன் தரப்பில் தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில் திருகோணமலை மாவட்டத்தின் அனைத்து தெரிவுகளையும் மீளவும் மேற்கொள்ள வேண்டும் என்றும், அந்தத் தெரிவுகள் அனைத்தும் சுயாதீனக் குழுவொன்றின் முன்னிலையில் வெளிப்படைத்தன்மையாக இடம்பெறவேண்டும் என்பதில் சம்பந்தன், உறுதியாக உள்ளார்.

இதுசம்பந்தமாக இறுதியான தீர்மானம் எதிர்வரும் பத்தாம் திகதி கொழும்பில் உள்ள சம்பந்தனின் இல்லத்தில் நடைபெறவுள்ள கட்சியின் அரசியல் குழுக் கூட்டத்தில் எடுக்கப்படவுள்ளது.

இதேவேளை, கட்சியின் தலைமைத்துவத்திற்காக போட்டியிடுபவர்களில் ஒருவரான சிவஞானம் சிறீதரன், கிழக்கு மாகாணத்திற்கு விஜயமொன்றை மேற்கொண்டுள்ளார். அவர் சனிக்கிழமை முதல் மட்டக்களப்பில் பிரசாரத்தை முன்னெடுக்க ஆரம்பித்துள்ளார்.

இதன்போது கட்சியின் ஆதரவாளர்கள் மற்றும் தலைமைத்தெரிவில் வாக்களிக்கவுள்ள பொதுச்சபை உறுப்பினர்கள் உள்ளிட்ட பலரையும் நேரில் சந்தித்து உரையாடல்களைச் செய்துவருகின்றமை குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.