நாட்டைக் கட்டியெழுப்ப அனைவரும் ஒன்றிணைக! வர்த்தக இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன் அழைப்பு

நாடு கண்ட பொருளாதார வீழ்ச்சியில் இருந்து மீள்வதற்கு இன்னும் கடுமையாக உழைக்க வேண்டும் என்றும், இதற்கான திட்டங்களை ஜனாதிபதி வகுத்துள்ளார் எனவும் வர்த்தக இராஜாங்க  அமைச்சர் வியாழேந்திரன் தெரிவித்தார்.

தற்போது நாட்டை மீட்டெடுக்க அரசாங்கம் முன்னெடுத்துள்ள இந்த வேலைத் திட்டங்களுக்கு ஆளும், எதிர்க்கட்சி என்ற பாகுபாடு இன்றி, அனைவரும் கரம்கோர்த்து செயற்படவேண்டும் என்றும் இராஜாங்க அமைச்சர் தெரிவித்தார்.

பிரச்சினைகளை வைத்து, அரசியல் செய்வதென்பது இலகுவான விடயம் என்றும் அந்தப் பிரச்சினைகளுக்கு தீர்வுகளைப் பெற்றுக்கொடுப்பதே கடினமான விடயம் என்றும் பிரச்சினைகளுக்கு தீர்வுகளைப் பெற்றுக்கொடுக்கும் வேலைத்திட்டங்களையே அரசாங்கம் தற்போது முன்னெடுத்துள்ளதாகவும் இராஜாங்க அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

ஜனாதிபதி ஊடக மையத்தில்  நடைபெற்ற ஊடக சந்திப்பில் கருத்துத் தெரிவிக்கும்போதே வர்த்தக இராஜாங்க  அமைச்சர் வியாழேந்திரன் இவ்வாறு தெரிவித்தார்.

அங்கு மேலும் கருத்துத் தெரிவித்த இராஜாங்க  அமைச்சர் வியாழேந்திரன் –

எமது நாடு 2020 ஆம் ஆண்டில் இருந்து தொடர்ச்சியாக அடுத்தடுத்து இரண்டு பிரச்சினைகளைச் சந்தித்தன. முதலாவது, நாட்டில் ஏற்பட்ட கொவிட் தொற்று. கொவிட் தொற்றிலிருந்து ஓரளவு மீண்டுவந்தபோது, மிகப் பெரிய பொருளாதார வீழ்ச்சி ஏற்பட்டது. மிகக்குறுகிய காலத்தில் இவ்வாறான இரண்டு சவால்களை நாம் எதிர்கொண்டோம்.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உள்ளிட்ட அரசாங்கம் முன்னெடுக்கும் வேலைத்திட்டத்தால் பொருளாதார வீழ்ச்சியில் இருந்து தற்போது நாம் ஓரளவு மீள் எழுந்து வருகின்றோம். என்றாலும் அது முழுமை பெறவில்லை. அது முழுமை பெற வேண்டுமாயின் நாம் இன்னும் கடுமையாக செயற்பட வேண்டும். அதற்காக ஜனாதிபதி பல திட்டங்களை வகுத்திருக்கின்றார். அரசாங்கம் என்ற வகையில் பல்வேறு வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன.

எவ்வாறாயினும் மக்களின் வாழ்க்கைச் சுமை குறைக்கப்பட வேண்டும். ஒரு மரத்தை ஒரே நாளில் வெட்ட முடியும். ஆனால் அந்த மரத்தை உருவாக்க பல வருடங்கள் தேவைப்படும். அதேபோன்று தான் இந்த நாடு பொருளாதார ரீதியில் பாரிய வீழ்ச்சியைக் கண்டது.  எனவே அதனை மீட்டெடுக்க காலம் தேவைப்படுகின்றது. ஒரே நாளில் ஒரு மரத்தை நட்டு ஒரே நாளில் அதன் பலனைப் பெற முடியாது. ஏதோ ஒரு வகையில் கடந்த 74 வருடங்களாக இந்த நாட்டை மாறி மாறி ஆட்சி செய்த அரசாங்கங்கள் விட்ட பிழைகள் மற்றும் தூர நோக்கற்ற சிந்தனை உண்மையில் இந்த நாடு மிகப் பெரிய பொருளாதார வீழ்ச்சிக்குள் சென்றது.

ஆகவே இந்த நேரத்திலே ஆளுங்கட்சி, எதிர்கட்சி என்ற பாகுபாடுகளை ஒரு பக்கம் வைத்து விட்டு மக்களால் தெரிவு செய்யப்பட்ட மக்கள் பிரதிநிதி என்ற வகையில் இந்த நாட்டு மக்களுக்கான சேவையை, குறிப்பாக வாழ்க்கைச் சுமையைக் குறைக்கக்கூடிய விடயங்களை முன்னெடுக்கவும் நாட்டை மீட்டெடுக்கவும் நாங்கள் அனைவரும் கரம்கோர்த்து செயற்படவேண்டும்.  அதற்கான காத்திரபூர்வமான நடவடிக்கைகளை அரசாங்கம் செயற்படுத்திக்கொண்டு வருகின்றது. அவ்வாறான நடவடிக்கைகள் எதிர்வரும் ஆறு மாத காலத்திற்குள் இன்னும் அதிகமாக முன்னெடுக்கப்படும் என்பதை நான் கூறிக்கொள்ள விரும்புகின்றேன்.

பிரச்சினைகளை வைத்துக்கொண்டு அரசியல் செய்வதென்பது இலகுவான விடயம். அதனை எல்லோராலும் செய்ய முடியும்.ஆனால் அந்தப் பிரச்சினைகளுக்கு தீர்வுகளைப் பெற்றுக்கொடுப்பது என்பது தான் கடினமான விடயம். ஆகவே நாம் பிரச்சினைகளுக்கு தீர்வுகைளைப் பெற்றுக்கொடுப்பதற்கான வேலைத்திட்டங்களையே முன்னெடுத்து வருகின்றோம்.

எம்மைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ் மக்களைப் பொருத்தமட்டில் உரிமை என்பது ஒரு கண்ணாக இருந்தால் அபிவிருத்தி என்பது மறு கண்ணாக இருக்க வேண்டும். உரிமையுடன் கூடிய அபிவிருத்தி சார்ந்த அரசியலைக் கட்டமைப்பதன் ஊடாக மாத்திரம் தான் எமது சமூகத்தின் இருப்பைப் பாதுகாத்துக்கொள்ள முடியும். இந்த அடிப்படையிலேயே இந்த நாட்டில் ஏனைய சமூகங்களும் பயணிக்கின்றன. எனவே நாமும் அவ்வாறு உரிமை மற்றும் அபிவிருத்தி என்ற இரண்டையும் ஒருசேர முன்னெடுத்துச் செல்ல வேண்டும். – என்று வர்த்தக இராஜாங்க  அமைச்சர் வியாழேந்திரன் மேலும் தெரிவித்தார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.