சபாநாயகர், எதிர்க்கட்சித்தலைவரை சந்தித்தார் ஜப்பான் நிதி அமைச்சர்!
இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள ஜப்பானின் நிதி அமைச்சர் சுசுகி ஷுனிச்சி சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவை வெள்ளிக்கிழமை நாடாளுமன்றத்தில் சந்தித்தார்.
இந்த சந்திப்பில் நாடாளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர மற்றும் இலங்கைக்கான ஜப்பான் தூதுவர் மிசுகோஷி ஹிட்டயாகே ஆகியோரும் கலந்துகொண்டனர்.
இதன்போது, கருத்துத் தெரிவித்த ஜப்பானின் நிதி அமைச்சர் குறிப்பிடுகையில், ஜப்பான் மற்றும் இலங்கைக்கு இடையில் நீண்ட கால நட்புறவு காணப்படுவதாகவும் இலங்கையின் பொருளாதார உறுதிப்பாடு தொடர்பில் ஜப்பானின் ஆதரவை வழங்குவதற்கு நடவடிக்கை எடுப்பதாகத் தெரிவித்தார். அத்துடன், இரு நாடுகளுக்குமிடையிலான நட்புறவை மேலும் விருத்திசெய்துகொள்வது தொடர்பிலும் இதன்போது கலந்துரையாடப்பட்டது.
அத்துடன், இலங்கை தொடர்பில் ஜப்பான் வழங்கும் ஆதரவுகளுக்கு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன இதன்போது நன்றிகளைத் தெரிவித்ததுடன் எதிர்காலத்திலும் ஜப்பானின் ஆதரவை எதிர்பார்ப்பதாகத் தெரிவித்தார்.
இதேவேளை, சுசுகி ஷுனிச்சி எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ உள்ளிட்ட எதிர்க்கட்சியைப் பிரதிநிதித்துவப்படும் உறுப்பினர்களையும் சந்தித்துக் கலந்துரையாடினார்.
கருத்துக்களேதுமில்லை