உள்நாட்டு பிரச்சினைகளிற்கு தீர்வுகண்டபின் சர்வதேச கடற்பரப்பை பாதுகாக்க செல்லுக! கர்தினால் மல்கம் ரஞ்சித் இடித்துரைப்பு

அரசாங்கம் சர்வதேச கடற்பரப்பைப் பாதுகாப்பதற்கு முன்னர் உள்நாட்டில் காணப்படும் பிரச்சினைகளுக்கு தீர்வைக் காணவேண்டும் என கர்தினால் மல்கம் ரஞ்சித் கருத்து வெளியிட்டுள்ளார்.

சர்வதேச கடற்பரப்பிற்கு கப்பலை அனுப்பும் அரசாங்கத்தின் தீர்மானத்தை விமர்சித்துள்ள அவர், உள்நாட்டில் மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் புறக்கணிக்கப்பட்டுள்ளன  எனக் குறிப்பிட்டுள்ளார்.

பொரளை தேவலாயத்தில் இரண்டு வருடங்களிற்கு முன்னர் கைக்குண்டு மீட்கப்பட்டதை குறிப்பதற்காக இடம்பெற்ற விசேட ஆராதனையின்போது இதனைத் தெரிவித்துள்ள அவர், இரண்டு வருடங்கள் கடந்துள்ள போதிலும் கைக்குண்டை வைத்த உண்மையான குற்றவாளி யார் என்பதைக் கண்டுபிடிப்பதற்கு அதிகாரிகள் தவறிவிட்டனர் என கர்தினால் மல்கம் ரஞ்சித் தெரிவித்துள்ளார்.

உயிர்த்தஞாயிறு தாக்குதல்களை மேற்கொண்டவர்கள் யார்? ஊடகங்களைத் துன்புறுத்தியவர்கள் யார்? என்பதைக் கண்டுபிடிப்பதற்கு அதிகாரிகள் தவறியுள்ளனர் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னணியில் உள்ளவர்கள் நீதியின் முன்நிறுத்தப்படுவார்களா என்பதைப் பார்ப்பதற்காக நாங்கள் காத்திருக்கின்றோம். பிரகீத் எக்னலிகொடவின் கொலைக்கு யார் காரணம் என்பதும் லசந்தவை யார் கொலை செய்தார்கள் என்பதும் எவருக்கும் இதுவரை தெரியாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

அனைத்தும் மூடிமறைக்கப்பட்டுள்ளது. அதிகாரிகள் உள்நாட்டு பிரச்சினைகளிற்குத்எ தீர்வைக் காண்பதற்கு பதில் சர்வதேச கடற்பரப்பைப் பாதுகாப்பதற்கே முன்னுரிமை வழங்குகின்றனர் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

2024 ஆம் ஆண்டு தேர்தல்களின் ஆண்டு என அறிகின்றோம் இந்த தடவை சரியான தலைவர்களிடம் மக்கள் ஆட்சியை வழங்குவார்கள் என எதிர்பார்க்கின்றோம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.