தமது சொந்தக் காணியில் இராணுவம் விவசாயம் செய்வதை வேலியால் பார்க்கும் வடக்கு மக்கள்! சாணக்கியன் வேதனை

தங்களது சொந்த காணியில் இராணுவம் விவசாயம் செய்வதை வேலியால் பார்க்கும் வட பகுதி மக்களின் நிலை யாருக்கும் வரக்கூடாது என  நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற அமர்வில் கேள்விபதிலின் போது  பாதுகாப்பு அமைச்சரிடம் தெரிவித்தபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் குறிப்பிடுகையில் –

வடக்கு, கிழக்கில் இடம்பெற்ற யுத்தம் முடிந்து தற்போது 15 வருடங்கள் முடிவடையப் போகின்றது. 15 வருடங்களுக்குப் பின்னரும் குறிப்பாக இந்த வடக்கு கிழக்கு மாவட்டங்களில் மாத்திரம் இராணுவ முகாம்களை பாதுகாப்பு கருதி வைத்திருக்கின்றோம் எனக் கூறுவதை எங்களால் ஏற்றுக் கொள்ள முடியாது.

குருக்கள் மடம் பாடசாலைக்குரிய மைதானக் காணியானது இராணுவ கட்டுப்பாட்டினுள் இல்லை எனக் கூறினாலும் தற்போது வரை அவ் மைதான காணி இராணுவ கட்டுப்பாட்டிலேயே இருக்கிறது.

மொறக்கொட்டான் சேனையில் இராணுவ முகாம் அமைத்திருக்கும் பாடசாலைக்கு பதிலாக பிறிதொரு பாடசாலையினை அமைத்ததாக கூறியுள்ளீர்கள்.

புதிதாக அமைக்கப்பட்ட பாடசாலை ஓர் ஆற்றோர பிரதேசத்தில் காணப்படுகின்றது. இதனை அக் கிராம பெற்றோர்களோ, பிள்ளைகளோ விரும்பவில்லை.

தற்காலிகமான மாற்று வழியாக அப் பாடசாலையை பயன்படுத்தினாலும் தொடர்ந்து அதனைப் பயன்படுத்த முடியாத நிலை காணப்படுகின்றது.

மொறக்கொட்டான் சேனையில் இராணுவ முகாம் அமைக்கப்பட்டுள்ள பாடசாலை பாதுகாப்பிற்கு முக்கியம் எனக் கருதுகின்றீர்கள். கொழும்பிலிருந்து மட்டக்களப்பு வரை நீங்கள் பயணம் செய்யவில்லை என்று நினைக்கின்றேன். ஏனெனில் பொலன்நறுவை – மன்னம்பிட்டி வரை ஏராளாமான காணிகள் உங்களது இராணுவ முகாம்களை அமைப்பதற்கு காணப்படுகின்றது. அவ்வாறிருக்க நீங்கள் கிராமத்தின் நடுப்பகுதியில் இருக்கும் காணியே முக்கியம் எனக் கருதுவதை நாங்கள் எவ்வாறு ஏற்றுக் கொள்ள முடியும்?

வடக்கில் பலாலி பிரதேசத்தில் கூட மக்களுடைய நிலங்களில் இராணுவத்தினர் நிலத்திற்கு உரிமையுடைய மக்கள் வேலியால் பார்க்கும் வண்ணம் விவசாய நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றார்கள். மக்களுடைய காணிகளை இராணுவத்தினர் அபகரித்துள்ளனர். ஜனாதிபதியிடம் ஒவ்வொரு முறையும் சந்தித்து இது தொடர்பில் பேசும் போது ஜனாதிபதி அவர்கள் பாதுகாப்பு அமைச்சரிடம் ‘ஏன் இன்னும் இந்த காணிகள் விடுவிக்கப்படவில்லை’ எனக் கேள்வி எழுப்புவார். ஜனாதிபதி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரை அழைத்து ஒரு விடயத்தைக் கூறினால்; பாதுகாப்பு அமைச்சர் ஜனாதிபதி கூறாத விடயங்களை புரிகின்றார். ‘இதில் உண்மை பேசுவது ஜனாதிபதியா? அல்லது பாதுகாப்பு அமைச்சரா?’ இதுவே என் முதற் கேள்வி…

சுனாமியின் காரணமாக இராணுவ முகாம்களை பாடசாலைக்கு கொண்டு சென்றார்கள். ஆனால் மைதானங்களை தூக்கிக் கொண்டு செல்ல முடியாது. கல்வி கற்பிப்பது என்பது ஒரு கட்டடத்தினுள் மேற்கொள்ளும் விடயமன்று. அதற்கு சிறந்த இடவசதிகள் தேவை. பாடசாலையினை பிரதான வீதியில் கட்டுவதற்கு மைதானத்தினை கொண்டு செல்ல முடியாது. பாதுகாப்பு தொடர்பான விடயங்களுக்காக வேறு காணிகளை உங்களால் பெற்றுக் கொள்ள முடியும். காயங்கேணி பகுதியில் கடற்படை செயற்பாடுகளுக்கு காணி வேண்டும் எனக் கூறி காணிகளை அபகரிக்கின்றனர். பாலையடிவேட்டையில், தாண்டியடி போன்ற இடங்களிலும் காணி அபகரிப்பு நடைபெற்ற வண்ணமே இருக்கின்றது. ஆகவே ‘இந்த காணிகளை விடுவிப்பதற்கான எண்ணம் உங்களிடம் இருக்கிறதா? இல்லையா?’ என்ற இவ்வாறான கேள்விகள் ஷபாதுகாப்பு அமைச்சரிடம் எழுப்பப்பட்டன.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.