அரச வளங்களை கொள்ளையடித்தவர்களை   எமது அரசில் சட்டத்தின் முன் நிறுத்துவோம்! சஜித் பிரேமதாஸ சபதம்

வற் வரியை அறவிடமால், அரச வளங்களைத் திருடிய திருடர்களை சட்டத்தின் முன் நிறுத்தி கொள்ளையிட்ட பணத்தை மீள பெற்றுக்கொள்ள வேண்டும்.ஐக்கிய மக்கள் சக்தி அரசாங்கத்தில் இந்த திருடர்கள் அனைவரும்  சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு,அனைத்து வித தண்டனைகளும் வழங்கப்படும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நிலையியற் கட்டளை 27 இன் 2 கீழ் கேள்வி நேரத்தில் உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில் –

நாட்டை பொருளாதார ரீதியாக வங்குரோத்தாக்கி, நாட்டு மக்களை மிகவும் நிர்க்கதியான எதிர்காலத்திற்கு ஆளாக்கிய தரப்பினர் யார் என்பதை உயர் நீதிமன்றத்தின் சமீபத்திய தீர்ப்பின் ஊடக வெளிக்கொணரப்பட்டது.இவ்வாறு வெளிக்கொணரப்பட்ட கோட்டாபய ராஜபக்ஷ, மஹிந்த ராஜபக்ஷ, பஸில் ராஜபக்ஷ, அஜித் நிவாட்கப்ரால், எஸ்.ஆர்.ஆடிகல, பி.பி.ஜயசுந்தர, டபிள்யூ.டி. லக்ஷ்மன் மற்றும் சமந்தா குமாரசிங்க ஆகியோர் உள்ளிட்ட பொறுப்புக் கூற வேண்டிய மேலும் பலர் இந்த அரசாங்கத்தில் உள்ளனர்.இந்த ஊழல் மற்றும் மோசடி நடவடிக்கைகளுக்குக் காரணமானவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதா என வரிச்சுமைக்கு ஆளான மக்கள் கேள்வி எழுப்புகின்றனர்.

அத்துடன் எரிவாயு, சீனி, நானோ நைட்ரஜன், நிலக்கரி, மல உரம் போன்ற மோசடிகளுக்கு எதிரான விசாரணைகள் தாமதமாக இடம்பெற்றாலும், நுண், சிறு மற்றும் நடுத்தர வர்த்தகர்களுக்கு பரேட் சட்டத்தை அமுல்படுத்தி அவர்களின் சொத்துக்கள் ஏலம் விடப்பட்டு வருகின்றன.

2019-2022 ஆம் ஆண்டில் நிகழ்ந்த பல முறைகேடுகள் தொடர்பான விசேட கணக்காய்வு விசாரணைகள் தொடர்பான பல சிக்கல்கள் உள்ளன. சீனி வரி மோசடிக்கு எதிராக அரசாங்கம் எடுத்துள்ள சட்ட நடவடிக்கை என்ன?

2020 ஆம் ஆண்டு ஒரு கிலோ சீனிக்கு விதிக்கப்பட்ட விசேட பண்ட வரியை 50 ரூபாவில் இருந்து 25 சதமாக அரசாங்கம் குறைத்ததன் காரணமாக, நுகர்வோருக்கு நிவாரணம் கிடைக்காத நிலையில், அரசாங்கத்திற்கு 16 பில்லியன் ரூபா இழப்பு ஏற்பட்டது.  23.3.2022 அன்று வெளியிடப்பட்ட விசேட கணக்காய்வு  அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.கோபா குழுவிற்கு அறிக்கையை அனுப்பிய பிறகு, வருமானம் பெறாததற்கு பொறுப்பான தரப்பினரை அடையாளம் காண 21 ஜூன் 2022 அன்று குற்றப்புலனாய்வு பிரிவுக்கு அனுப்பி வைக்கப்பட்டு 19 மாதங்கள் கடந்து விட்டன. இதற்கு பொறுப்புக்கூற வேண்டிய தரப்பினர் யார் என்பதை அரசாங்கம் இனம் கண்டிருக்கிறதா எனக் கேட்கிறேன்.

அத்துடன் இலகு ரயில் திட்டம் எந்த தர்க்க ரீதியான அடிப்படையும் இல்லாமல் இடைநடுவிலையே நிறுத்தப்பட்டதால் 10000 மில்லியன் ரூபா நஷ்டம் ஏற்பட்டதாக 23.11.2022 அன்று வெளியிடப்பட்ட விசேட கணக்காய்வு  அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இந்த விசேட கணக்காய்வு அறிக்கை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு 13 மாதங்கள் கடந்துள்ள போதிலும், கோப் அல்லது கோபா குழுக்களில் கருத்தில் கொள்ளாததற்கான காரணம் என்ன? இந்த முட்டாள்தனமான முடிவால், ஜப்பான் நாடு இன்னும் நமது நாட்டுடன் சிறந்த மனதுடன் இல்லை. அதனால், இந்த நஷ்டத்தை ஈடுகட்ட அரசாங்கம் எடுத்துள்ள நடவடிக்கைகள் என்ன எனக் கேட்கிறோம்.

மேலும் 2021-2022 ஆம் ஆண்டில் 96000 மெட்ரற்றிக் தொன் சேதன உரங்கள் கொள்முதல் செய்யப்பட்டதால், அரசாங்கத்திற்கு 69000 அமெரிக்க டொலர் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாகவும், கணக்கிடப்படாத பெரிய இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் 26.8.2022 திகதியிடப்பட்ட  விசேட கணக்காய்வு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.இது வெளியிடப்பட்டு 16 மாதங்கள் கடந்துள்ள போதிலும்,கோப் அல்லது கோபா குழுக்களால் இது தொடர்பில் இதுவரை ஏன் பரிசீலிக்கப்படவில்லை எனக் கேள்கிறோம்.

அதேபோன்று ஒரு போத்தல் நானோ நைட்ரஜன் திரவ உரம் 5.25 அமெரிக்க டொலர்களுக்கு கொள்வனவு செய்ய முடியுமாக இருந்தாலும்,12.45 மற்றும் 10 அமெரிக்க டொலர்களுக்கு கொள்வனவு செய்வதற்கு 711 மில்லியன் ரூபா செலவாகியுள்ளதாக 12.13.2023 திகதியிட்ட விசேட கணக்காய்வு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதனால் அரசாங்கத்திற்கு ஏற்பட்ட இழப்பு யாது? இந்த அறிக்கை எப்போது கோப் அல்லது கோபா குழு முன் பரிசீலிக்கப்படும் என்று கேட்கிறோம்.

மேலும் நிலக்கரி நிறுவனத்தால்,500 பில்லியன் பொறுமதியான கொள்முதலை தகுதியில்லாத வழங்குநருக்கு வழங்குவதற்கான உடன்பாட்டை எட்டுவதற்கு முன் சட்டமா அதிபரின் ஆலோசனை பெறப்படவில்லை என்றும்,கொள்முதல் குழுவும்,தொழில்நுட்ப மதிப்பீட்டுக் குழுவும் இந்தப் பணிகளைச் சரியாகச் செய்யவில்லை என்றும் 30.9.2022 திகதியிட்ட விசேட கணக்காய்வு  அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. அறிக்கையின் பரிந்துரைகளுக்கு பொது அலுவல்கள் குழுவும் ஒப்புதல் அளித்துள்ள நிலையில் அரசாங்கத்திற்கு ஏற்பட்ட இழப்பு மற்றும் அந்த இழப்பை ஈடுகட்ட அரசாங்கம் எடுத்துள்ள நடவடிக்கைகள் என்ன?

எல்.பி.ஜி கொள்முதலின் போது,சியாம் கேஸ் ட்ரேடிங் நிறுவனத்திடம் இருந்து குறைந்த விலைக்கு கொள்வனவு செய்யாமல்,ஓகிம் டிரேடிங்கில் நிறுவனத்திடம் இருந்து அதிக விலைக்கு கொள்வனவு செய்தமையினால், அரசாங்கத்திற்கு 1138 அமெரிக்க டொலர் மேலதிக செலவு ஏற்பட்டது. முறையான நிதி மதிப்பீடு அல்லது நிதி உறுதிப்படுத்தல் இல்லாமல் எரிவாயுவை கொள்வனவு  செய்ததால்,கப்பல்களுக்கு கூட 210 மில்லியன் ரூபா 5 மாத காலத்திற்கு மேலதிகமாக செலுத்தப்பட்டுள்ளதாக 11.12.2022 ஆம் திகதியிட்ட விசேட கணக்காய்வு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த அறிக்கை கோப்  மற்றும் கோபா குழுக்களில் பரிசீலிக்கப்படவில்லை.இதற்கு பொறுப்புக் கூற வேண்டியவர்கள் யார் என கேட்கிறோம்.

எனவே வற் வரியை அறவிடமால், அரச வளங்களை திருடிய திருடர்களை சட்டத்தின் முன் நிறுத்தி அவர்களிடமிருந்து கொள்ளையிடப்பட்ட பணத்தை பெற்றுக்கொள்ள அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும். ஐக்கிய மக்கள் சக்தி அரசாங்கத்தில் இந்த திருடர்கள் அனைவரும் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு, அனைத்து வித தண்டனைகளையும் பெற்றுக்கொடுக்க நாங்கள் நடவடிக்கை எடுப்போம். – என்றார்

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.