இலங்கையின் சுதந்திர தினம் சிங்களவர்களுக்கும் கரிநாளே – யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம்

இலங்கையின் சுதந்திர தினத்தை கரிநாளாக பிரகடனப்படுத்த வேண்டும் என அழைப்பு விடுத்த யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம், சிங்கள மக்களுக்கும் கரிநாள் என்பது பொருத்தமானதே என தெரிவித்தனர்.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் வியாழக்கிழமை (25) நடைபெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தெரிவித்தபோதே பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய பிரதிநிதிகள் இவ்வாறு தெரிவித்தனர்.

இலங்கை தீவிலே தமிழ் மக்கள் தங்கள் இருப்புக்களை தக்க வைப்பதற்கு அன்றிலிருந்து இன்று வரை தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றார்கள்.

அதனடிப்படையில் எதிர்வரும் பெப்ரவரி 4 ஆம் திகதி இலங்கையின் சுதந்திர தினத்தை கரி நாளாக பிரகடனபடுத்தி வடக்கு, கிழக்கு தழுவிய பிரகடனத்தை பொதுமக்களுக்கு தெரியப்படுத்துகின்றோம்.

குறிப்பாக இந்த இலங்கைத் தீவிலே தமிழ் மக்களுக்கான உரிமைகள் இருப்புக்கள் மீறப்பட்டு வருகின்றன. ஆட்சிகள் மாறுகின்றன. ஆட்சியாளர்களும் மாறிக்கொண்டே இருக்கின்றார்கள். ஆனால் தமிழ் மக்களுக்காக இன்றுவரை எந்த ஒரு தீர்வு திட்டமும் முன்வைக்கப்படவில்லை. இதய சுத்தியுடன் தமிழ் மக்களுக்கான தீர்வினை பெற்றுதர சிங்கள தரப்புக்கள் தயாராக இல்லை.

வடக்கு, கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள், சிவில் சமூகங்கள், சமூக செயற்பாட்டாளர்கள், மதத் தலைவர்கள், அனைத்து தொழிற்சங்கங்களும் சுதந்திர தினத்தை கரிநாளாக பிரகடனப்படுத்த ஆதரவினை வழங்கவேண்டும்.

தமிழர்களின் உரிமைக்கான போராட்டத்தை சிதைக்கும் நோக்கில் இலங்கை அரசாங்கம் தீவிரமாக செயற்பட்டு வருகின்றது. நிகழ்நிலை பாதுகாப்பு சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இந்த நாட்டிலே ஊடக சுதந்திரத்தை, ஒரு பொதுமகனின் கருத்து சுதந்திரத்தை கூட இந்த அரசாங்கம் பறித்தெடுத்து கொண்டுதான் இருக்கிறது. இதன் மூலம் போராட்டங்களில் ஈடுபடுகின்றவர்களை ஒடுக்க இவ்வாறான சட்டங்களை நடைமுறைபடுத்தி மல்லினபடுத்தி அவர்களை கைது செய்யும் நோக்கோடு இந்த அரசு செயற்பட்டு வருகின்றது.

இவர்கள் ஒருபோதும் தமிழர்களின்  அரசியல் தீர்வு, அரசியல் கைதிகள் விடுதலை, காணாமலாக்கப்பட்டோர் விவகாரம்,வடக்கு கிழக்கில் அத்துமீறிய குடியேற்ற திட்டங்கள், திட்டமிட்ட பௌத்த மயமாக்கலையோ நிறுத்த போவதில்லை. எமக்கான தீர்வு கிடைக்கும்வரை நாம் தொடர் போராட்டத்தில்  ஈடுபட்டே ஆகவேண்டும் என்பது வரலாற்று உண்மை.

மேலும் கரிநாள் என்பது சிங்கள மக்களுக்கும் பொருத்தமானதே காரணம், சிங்கள மக்களுக்கும் எதிரான சட்டங்கள் உருவாக்கப்பட்டே வருகின்றன. இதனை அனைத்து தரப்புக்களும் புரிந்துகொள்ள வேண்டும்.

சமநேரத்தில் எங்களுக்குரிய நிரந்தர அரசியல் தீர்வை பெற்று தருவதற்கு அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டும் அதனடிப்படையில் 13 ஆவது  திருத்தம் தமிழர்களுக்கான ஆரம்ப புள்ளியோ முடிவு புள்ளியோ கிடையாது. 13ஐ நாம் ஒரு போதும் ஏற்றுகொள்ள முடியாது. ஆகவே தமிழர்களின் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வினை காணாது நாங்கள் எங்களுடைய போராட்டங்களையோ போராட்ட வடிவங்களையோ கைவிடப்போவதில்லை என பல்கலைக்கழக மாணவர் சமூகமாக வலியுறுத்துகின்றோம்.

எங்களுடைய இனம் விடுதலை பெற வேண்டும். இனத்திற்குரிய நிரந்தர அரசியல் தீர்வு கிடைக்க இலங்கையின் சுதந்திர தினத்தினை கரிநாளாக பிரகடனபடுத்த பூரண ஆதரவினை தந்துவுமாறு அவர் மேலும் தெரிவித்தார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.