திருகோணமலையில் 2,196 பேர் சுய தனிமைப்படுத்தல்…

திருகோணமலை மாவட்டத்தில் வெளிநாடுகளில் இருந்து வருகை தந்த 744 பேரும், உள்நாட்டின் பிற மாவட்டங்களில் இருந்து வருகை தந்த ஆயிரத்து 452 பேரும் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். என்று மாவட்ட அரச அதிபர் ஜே.எஸ்.டி.எம்.அசங்க அபேவர்தன தெரிவித்தார்.

கொரோனா தடுப்புக்கான தனிமைப்படுத்தல் செயற்பாடு பிராந்திய சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தின் மேற்பார்வையின் கீழ், சிரமமான முறையில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது எனவும் அவர் குறிப்பிட்டார்.

அவர் மேலும் கூறுகையில்,

“வெளிநாடுகளில் இருந்து வருகை தந்த 744 பேரும், உள்நாட்டின் பிற மாவட்டங்களில் இருந்து வருகை தந்த ஆயிரத்து 452 பேரும் சுய தனிமைப்படுத்தல் செயற்பாட்டுக்கு உட்படுத்தப்பட்ட நிலையில், அவர்களுள் வெளிநாடுகளில் இருந்த வந்த 676 பேரினதும், உள்நாட்டின் பிற மாவட்டங்களில் இருந்து வந்த 656 பேரினதும் சுய தனிமைப்படுத்தல் செயற்பாடு பூர்த்தியடைந்துள்ளது.

அத்துடன், 10 சந்தேகத்துக்கிடமான நபர்கள் அடையாளம் காணப்பட்டு உரிய மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டனர். அவர்கள் எவருக்கும் கொரோனா தொற்று காணப்படவில்லை என்று ஊர்ஜிதம் செய்யப்பட்டுள்ளது.

திருகோணமலை மாவட்டம் இற்றைவரை கொரோனா தொற்றிலிருந்து பாதுகாப்பாக உள்ளது. இங்கு எவருக்கும் இதுவரை நோய்த்தொற்று உறுதிப்படுத்தப்படவில்லை. தொடராக இதனைப் பேண அனைவரும் பொறுப்புடன் செயற்பட வேண்டும்” – என்றார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.