மே 23ஆம் திகதி பொதுத் தேர்தல்? தாமதித்தால் அது அரசுக்கு ஆப்பாக அமையும் என்பதால்

எதிர்வரும் மே 23ஆம் திகதி பொதுத்தேர்தலை நடத்தலாம் என அரசு உத்தேசமாகத் திட்டமிட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

அன்றைய தினத்தில் தேர்தலை நடத்தினால், அரசமைப்பு மீறல் எதுவுமில்லாமல் ஜூன் தொடக்கத்தில் – நாடாளுமன்றக் கலைப்பு வர்த்தமானியில் குறிப்பிட்டதைப்போல் – புதிய நாடாளுமன்ற அமர்வை கூட்டலாம் என்று அரசு திட்டமிட்டுள்ளது.

கொரோனா அச்சுத்தலால் நாடாளுமன்றத் தேர்தலைப் பிற்போட வேண்டும் எனப் பெரும்பாலான அரசியல் கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. தற்போதைக்கு தேர்தலை நடத்துவது பொருத்தமானதல்ல என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரியவும் கருதுகின்றார் எனத் தெரிகின்றது. எனினும், அரச தரப்பினர் உடனடியாகத் தேர்தலை நடத்தி முடிப்பதில் விடாப்பிடியாக உள்ளனர்.

கொரோனாவினால் நாடு மூடப்பட்டுள்ள நிலையில், உடனடியாகத் தேர்தலை நடத்துவது சாத்தியமில்லை எனத் தேர்தல்கள் ஆணைக்குழு கருதுகின்றது. நாடாளுமன்றத்தைக் கலைக்கும் ஜனாதிபதியின் வர்த்தமானியில் புதிய நாடாளுமன்றம் எதிர்வரும் ஜூன் மாதம் 2ஆம் திகதி கூடும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

எனினும், தேர்தல் வேட்புமனுத் தாக்கல் செய்யும் காலத்திலேயே கொரோனா தொற்று ஏற்பட்டது. அப்போதே நாட்டை முற்றாக முடக்கும்படி சில தரப்புக்கள் வலியுறுத்தி வந்தபோதும், வேட்புமனுக் காலம் முடியும் வரை நாடு முடக்கம் அறிவிக்கப்படவில்லை என அண்மையில் தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் பகிரங்கமாக விமர்சித்திருந்தார். இந்த அபிப்பிராயம் வேறும் சில தரப்பிடமும் உள்ளது.

வேட்புமனுக் காலத்தைப் பிற்போட்டு, உடனடியாக நாடு முடக்கம் அறிவிக்கப்பட்டிருந்தால், வேட்புமனுக் காலம் பின்தள்ளப்பட்டிருக்கும். இந்த அவகாசத்தில் ஐக்கிய தேசியக் கட்சியின் பிளவு சீரடையலாம். அதற்கு அனுமதிக்கக்கூடாது என்பதே அரச தரப்பின் நோக்கமாக இருந்தது என அந்தத் தரப்புக்கள் கருதுகின்றன.

அதேபோல், நாடாளுமன்றத்தை மீளக் கூட்ட விரும்பாமைக்கும் இதுவும் ஒரு காரணமாகக் கருதப்படுகின்றது.

நாடாளுமன்றத்தைக் கலைக்கும் தனது வர்த்தமானியை செல்லுபடியற்றதாக ஜனாதிபதி அறிவித்தால், தேர்தலுக்காகத் தாக்கல் செய்த வேட்புமனுக்களும் தானாகவே வலுவிழக்கும். மீண்டும் தேர்தல் அறிவிக்கப்படும்போது, புதிய வேட்புமனுத் தாக்கல் செய்யப்பட வேண்டும். இந்த அவகாசம், ஐ.தே.கவின் பிளவைத் தீர்க்கும் அவகாசமாக அமைந்துவிடக்கூடாது என்பது அரச தரப்பின் அவசரமாகக் கருதப்படுகின்றது.

இதேவேளை, தேர்தலைப் பின்தள்ளுவதை அரசு விரும்பாதமைக்கு எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய பொருளாதார நெருக்கடிகளும் காரணமாக அமையலாம் எனக் கருதப்படுகின்றது.

கொரோனா நெருக்கடி உலகளாவிய பொருளாதார நெருக்கடியைத் தோற்றுவித்துள்ளது. அடுத்த சில வாரங்களின் பின்னர் ஒவ்வொருவருமே இந்தப் பொருளாதார நெருக்கடியைத் தனிப்பட்ட ரீதியிலும் எதிர்கொள்ளும் காலம் வரலாம் எனப் பல்வேறு அமைப்புக்கள் எச்சரித்து வருகின்றன. இந்தநிலையில், இலங்கையிலும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டு, அது மக்களின் அதிருப்தியாக மாறும் காலத்துக்கு முன்னதாகத் தேர்தலை நடத்திவிட வேண்டும் என அரசு கணக்கிடுவதாகக் கூறப்படுகின்றது.

மேற்படி காரணங்களினால், ஜூன் 2ஆம் திகதி நாடாளுமன்றத்தைக் கூட்ட வசதியாக, மே 23ஆம் திகதி நாடாளுமன்றத் தேர்தலை நடத்த அரசு திட்டமிட்டுள்ளது. இதற்கு வசதியாக, ஏப்ரல் இறுதிப் பகுதியிலிருந்து நாடு முற்றாக விடுவிக்கப்படவுள்ளது.

கொரோனா அச்சுறுத்தல் உள்ள கொழும்பு, களுத்துறை, கம்பஹா, புத்தளம், கண்டி மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களையும் மே ஆரம்பத்துக்குள் முழுமையாகக் கட்டுப்படுத்தி, அபாயமற்ற வலயமாக மாற்றலாம் என அரசு கருதுகின்றது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.