15 மாவட்டங்களில் ‘கொரோனா’ கொழும்பில் 49 பேருக்கு தொற்று – தனிமைப்படுத்தல் நிலையங்களில் 38 பேர் பாதிப்பு

இலங்கையில் இதுவரை 15 மாவட்டங்களில் 238 பேர் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகியுள்ளனர். கொழும்பு மாவட்டத்திலேயே அதிகளவான தொற்றாளர்கள்  அடையாளம் காணப்பட்டுள்ளனர். அந்த மாவட்டத்தில் 49 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.

அதேவேளை, களுத்துறை மாவட்டத்தில் 45 பேரும், புத்தளம் மாவட்டத்தில் 35 பேரும், கம்பஹா மாவட்டத்தில் 28 பேரும், யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 16 பேரும், கண்டி மாவட்டத்தில் 07 பேரும், இரத்தினபுரி மாவட்டத்தில் 05 பேரும், குருநாகல், கேகாலை, மாத்தறை, அம்பாறை ஆகிய மாவட்டங்களில் தலா 2 பேர் வீதமும், காலி, மட்டக்களப்பு, பதுளை, வவுனியா ஆகிய மாவட்டங்களில் தலா ஒருவர் வீதமும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதனிடையே வெளிநாடுகளிலிருந்து நாடு திரும்பியவர்களைத் தனிமைப்படுத்தும் நிலையங்களில் இருந்து 38 பேரும், இலங்கை வந்திருந்த வெளிநாட்டுப் பிரஜைகள் 03 பேரும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கிளிநொச்சி, முல்லைத்தீவு, மன்னார், திருகோணமலை, நுவரெலியா, மாத்தளை, அம்பாந்தோட்டை, மொனராகலை, அநுராதபுரம், பொலனறுவை ஆகிய 10 மாவட்டங்களில் இன்னும் எவரும் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இதுவரை தொற்றுக்குள்ளாகியுள்ள 238 பேரில் 65 பேர் குணமடைந்துள்ளனர். 7 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 166 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

அதேவேளை, கொரோனா வைரஸ் சந்தேகத்தில் 144 பேர் வைத்தியசாலைகளில் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர் என்று சுகாதார அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.