அம்பாறை மாவட்டத்தில் சட்டவிரோத நடவடிக்கைகள் அதிகரிப்பு!

கொரோனா வைரஸ் அனர்த்தம் காரணமாக அம்பாறை மாவட்டத்தில் சட்டவிரோத நடவடிக்கைகள் அதிகரித்துள்ளதாக கல்முனை மதுவரி நிலையப் பொறுப்பதிகாரி போ.செல்வகுமார் தெரிவித்தார்.

ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்பட்ட நிலையிலும் அதன்பின்னர் அச்சட்டம் அமுலில் உள்ள நிலையிலும் இரு நாட்களாக நேற்றும் இன்றும் (வெள்ளிக்கிழமை) மதுவரி திணைக்களத்தினால் மேற்கொள்ளப்பட்ட திடீர் சுற்றிவளைப்பில் 6 பேர் கைதாகியதுடன் வரும் 20ஆம் திகதி பல்வேறு நீதிமன்றத்தில் வழக்குத்தாக்கல் செய்யப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

கிழக்கு மாகாண உதவி மதுவரி ஆணையாளர் கே.தர்மசீலன் மற்றும் அம்பாறை மாவட்ட மதுவரி அத்தியட்சகர் என்.துசாதரன் ஆகியோரின் வழிகாட்டலில் கல்முனை மதுவரி நிலைய பொறுப்பதிகாரி போ.செல்வகுமார் தலைமையில் சென்ற உத்தியோகத்தர்களான ரி.நளீதரன் எஸ்.குகனேசன் கே.செந்தில் வண்ணன் எம்.ரவீதாஸ் மதுவரி நிலைய சாரதி தலதாவத்த ஆகியோரே இச்சந்தேக நபர்களை கைது செய்தனர்.

இதில் திருக்கோவில் பகுதியில் சட்டவிரோதமாக பியர் போத்தலை தம்வசம் வைத்திருந்த ஒருவர் கைது செய்யப்பட்டதுடன் அதே பகுதியை சேர்ந்த மற்றுமொரு சந்தேகநபரான பெண் வடிசாராயத்தை தம்வசம் வைத்திருந்த நிலையில் கைதானார்.

மேலும், கல்முனை மதுவரி நிலைய எல்லைக்குட்பட்ட விநாயகபுரம் காயத்திரி கிராமத்தில் சட்டவிரோதமாக வடி சாராயத்தை தம்வசம் வைத்திருந்த மற்றுமொரு பெண் கைதானதுடன் மேற்குறித்த 3 சந்தேகநபர்களையும் எதிர்வரும் 20 திகதி அக்கரைப்பற்று நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இது தவிர நேற்று ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்பட்ட பின்னர் கல்முனை சந்தைத் தொகுதியில் தீர்வையற்ற சட்டவிரோத சிகரெட்டுக்களை பொது இடத்தில் புகைத்த இருவர் கைது செய்யப்பட்டனர். இவ்வாறு கைது செய்யப்பட்ட இரு சந்தேகநபர்களுக்கு எதிராக வரும் 20 ஆம் திகதி கல்முனை நீதிவான் நீதிமன்றில் வழக்குத்தாக்கல் செய்யப்படவுள்ளது.

இந்தத் தேடுதலின் தொடர்ச்சியாக இன்று நிந்தவூர் அட்டப்பளம் பகுதியில் வடிசாராயத்தை தம்வசம் வைத்திருந்த 45 வயதுடைய சந்தேகநபரை மதுவரித் திணைக்கள அதிகாரிகள் கைது செய்துள்ளனர். இச்சந்தேக நபரையும் எதிர்வரும் 20 திகதி சம்மாந்துறை நீதிமன்றத்தில் ஈஜர்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மேலும் இத்தேடுதல் நடவடிக்கையானது மேலும் தொடரவுள்ளதாகவும் பொதுமக்கள் தமது ஒத்துழைப்புகளை வழங்கவேண்டும் எனவும் கல்முனை மதுவரி நிலையப் பொறுப்பதிகாரி போ.செல்வகுமார் குறிப்பிட்டார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.