யாழில் மதுபானசாலைகளில் இருப்பு கணக்கிடப்பட்டு சீல் வைப்பு!

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் பாதுகாப்பு முன்னேற்பாடாக மதுபான சாலைகளில் இருப்பு கணிப்பீடு செய்யப்பட்டு முத்திரையிடப்படுவதாக (சீல்) மதுவரித் திணைக்களம் தெரிவித்துள்ளது.

நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றைக் கட்டுப்படுத்தும் நோக்கில் ஊரடங்குச் சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. ஊரடங்குச் சட்டம் தற்காலிகமாக தளர்த்தப்படும் மாவட்டங்களில் மதுபானசாலைகளைத் திறக்க அனுமதியில்லை என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

நாட்டில் கொரோனா வைரஸ் அபாய வலயங்களாக பிரகடனப்படுத்தப்பட்ட மாவட்டங்களில் மதுபானசாலைகள் மதுவரித் திணைக்களத்தினரால் பூட்டப்பட்டு முத்திரையிடப்படுகிறது.

இந்நிலையில் கடந்த சில நாட்களாக யாழ்ப்பாணத்தில் மதுபானசாலைகளில் உள்ள மதுபானங்களின் இருப்புகள் கணக்கெடுக்கப்பட்டு முத்திரையிடப்படுகின்றன. இந்தப் பணி நேற்று (வியாழக்கிழமை) வலிகாமத்தில் முன்னெடுக்கப்பட்டது.

ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்பட்டாலும் மறு அறிவிப்புவரை மதுபானசாலைகளை மூடுவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இதன் காரணமாகவே மதுவரித் திணைக்களத்தினரால் மதுபானசாலைகளுக்கு முத்திரையிடப்படுகிறது.

இதேவேளை, யாழ்ப்பாணத்தில் பல இடங்களில் சட்டத்துக்குப் புறம்பாக கசிப்பு உற்பத்தி அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.