ஹிஜாஸ் ஹிஸ்புல்லாவுக்கு எதிராக களத்தில் குதித்தார் ஞானசார தேரர்…

உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் தொடர்பில் சந்தேகத்தில் கைதுசெய்யப்பட்டுள்ள சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லா நிரபராதி என்பது நீதிமன்றத்தால் உறுதிப்படுத்தப்படும் வரை அவர் சட்ட மற்றும்  நீதிமன்ற நடவடிக்கைகளில் ஈடுபடுவதை இடைநிறுத்துவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப் பொதுபலசேனா அமைப்பு வலியுறுத்தியுள்ளது.

இது குறித்து பொதுபலசேனா அமைப்பின் பொதுச்செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் இன்று வெள்ளிக்கிழமை  நீதிமன்ற சேவைகள் ஆணைக்குழுவின் தலைவர் பிரதம நீதியரசர் ஜயந்ந ஜயசூரியவுக்குக் கடிதமொன்றை அனுப்பிவைத்திருக்கிறார்.

அக்கடிதத்தில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:-

“கடந்த வருடம் ஏப்ரல் 21 ஆம் திகதி உயிர்த்த ஞாயிறு தினத்தன்று இடம்பெற்ற குண்டுத் தாக்குதல்களுடன் தொடர்புபட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லா கைதுசெய்யப்பட்டிருக்கின்றார்.

அவர் குண்டுதாரிகள் இருவருடன் தொடர்புகளைப் பேணியதாகவும், அவர்களுடன் இணைந்து பல்வேறு அமைப்புக்களிலும் வெவ்வேறு பதவிகளை வகித்ததாகவும், அதுமாத்திரமன்றி குண்டுத்தாக்குதலை மேற்கொள்வதற்கான திட்டத்திலும் பங்குகொண்டதாகச் சந்தேகிப்பதாக கடந்த 15ஆம் திகதி குற்றப் புலனாய்வுப் பிரிவு தெரிவித்தது.

நபரொருவர் குற்றவாளி என்பது நிரூபணமாகும் வரை அவர் நிரபராதியாகவே கருதப்படவேண்டும் என்பதை நாமறிவோம்.

எனினும், இந்தச் சட்டத்தரணியின் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்களின் பாரதூரத்தன்மையைக் கருத்தில்கொண்டு விசாரணைகளின் பின்னர் அவர் நிரபராதி என்பது நீதிமன்றத்தால் உறுசெய்யப்படும் வரையில் அவரை சட்டத்துறையில் பணியாற்ற அனுமதிப்பது எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தலாம் எனக் கருதுகின்றோம்.

அதுமாத்திரமன்றி ஹிஜாஸ் ஹிஸ்புல்லா நிரபராதி என்பது நிரூபணமாக முன்னர் அவர் தனது தொழிலில் ஈடுபட அனுமதியளிக்கும் பட்சத்தில் மக்கள் நீதிமன்றத்தின் மீது கொண்டிருக்கும் நம்பிக்கையை இழப்பதற்கும் வாய்ப்புள்ளது. எனவே, அவரது குற்றமற்ற தன்மை உறுதியாகும் வரை அவர் சட்ட நீதிமன்ற நடவடிக்கைகளில் ஈடுபடுவதை இடைநிறுத்துவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்” – என்றுள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.