கொரோனாவின் அபாய வலயத்துக்குள் இருந்து விடுதலை பெற்றது குடாநாடு…

* திங்கள் முதல் யாழ்ப்பாணம் உட்பட 18 மாவட்டங்களில் காலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை ஊரடங்கு தளர்வு

கொழும்பு, கம்பஹா, களுத்துறை, புத்தளம், கண்டி, கேகாலை மற்றும் அம்பாறை மாவட்டங்களைத் தவிர்ந்த இதர அனைத்து மாவட்டங்களிலும் இப்போது அமுலில் உள்ள ஊரடங்குச் சட்டம் நாளைமறுதினம் 20ஆம் திகதி திங்கட்கிழமை காலை 5 மணிக்குத் தளர்த்தப்பட்டு அன்றைய தினம் இரவு 8 மணிக்கு மீண்டும் அமுலாகும் என்று ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.

யாழ்ப்பாணம் உட்பட இந்தப் 18 மாவட்டங்களிலும் மறு அறிவித்தல் வரை தினந்தோறும் இரவு 8 மணிக்கு அமுலாகும் ஊரடங்குச் சட்டம் மறுநாள் காலை 5 மணிக்கு தளர்த்தப்படும்.

அதற்கமைய கொரோனா அபாய வலயத்துக்குள் இருக்கும் யாழ். குடாநாடு நாளைமறுதினம் திங்கட்கிழமையுடன் விடுதலை பெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, கண்டி, கேகாலை, அம்பாறை மாவட்டங்களின் அலவத்துகொட, அக்குறணை, வரக்காபொல மற்றும் அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவுகளில் ஊரடங்குச் சட்டம் தொடர்ந்து அமுலில் இருக்கும். மேற்படி மூன்று மாவட்டங்களின் ஏனைய பொலிஸ் பிரிவுகளில் எதிர்வரும் திங்கட்கிழமை காலை 5 மணிக்குத் தளர்த்தப்படும் ஊரடங்கு மீண்டும் தினந்தோறும் இரவு 8 மணிக்கு அமுலாகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு மாவட்டத்தின் கொட்டாஞ்சேனை, கிராண்ட்பாஸ், பம்பலப்பிட்டி, வாழைத்தோட்டம், மருதானை, கொத்தட்டுவ, முல்லேரியா, வெல்லம்பிட்டி, கல்கிஸை, தெஹிவளை ,கொஹுவல ஆகிய பொலிஸ் பிரிவுகள், கம்பஹா மாவட்டத்தின் ஜா – எல, கொச்சிக்கடை, சீதுவை பொலிஸ் பிரிவுகள், புத்தளம் மாவட்டத்தின் புத்தளம், மாரவில, வென்னப்புவ பொலிஸ் பிரிவுகள், களுத்துறை மாவட்டத்தின் பண்டாரகம, பயாகல, பேருவளை, அளுத்கம பொலிஸ் பிரிவுகள் தவிர்ந்த இதர பொலிஸ் பிரிவுகளில் எதிர்வரும் 22ஆம் திகதி புதன்கிழமை முதல் காலை 5 மணிக்குத் தளர்த்தப்படும் ஊரடங்குச் சட்டம் தினமும் இரவு 8 மணிக்கு அமுலாகும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி அலவத்துகொட, அக்குறணை, வரக்காபொல, அக்கரைப்பற்று, கொட்டாஞ்சேனை, கிராண்ட்பாஸ், பம்பலப்பிட்டி, வாழைத்தோட்டம், மருதானை, கொத்தட்டுவ, முல்லேரியா, வெல்லம்பிட்டி, கல்கிஸை, தெஹிவளை ,கொஹுவல, ஜா – எல, கொச்சிக்கடை, சீதுவை, புத்தளம், மாரவில, வென்னப்புவ, பண்டாரகம, பயாகல, பேருவளை மற்றும் அளுத்கம பொலிஸ் பிரிவுகளில் ஊரடங்குச் சட்டம் தொடர்ந்து அமுலில் இருக்கும் எனவும் ஜனாதிபதி ஊடகப் பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.

பாடசாலைகள், பல்கலைக்கழகங்கள், பிரத்தியேக வகுப்புகள், சினிமா தியேட்டர்கள் மறு அறிவித்தல் வரை திறக்கப்படமாட்டாது எனவும், ஊரடங்குச் சட்டம் நீக்கப்பட்ட பகுதிகளில் கூட்டுத்தாபனங்கள் வங்கிகள் இயங்கவுள்ளன எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.