வீட்டைவிட்டு வெளியேறுவதை இயலுமானவரைத் தவிருங்கள்! – யாழ். மக்களிடம் சுகாதார திணைக்களம் கோரிக்கை…

யாழ். மக்களிடம் சுகாதார
திணைக்களம் கோரிக்கை

“யாழ்ப்பாணம் மாவட்டத்தில் சமூக மட்டத்தில் கொரோனா தொற்று ஏற்பட்டவர்களை அடையாளங்காண்பதற்கான பரிசோதனைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வரும் சூழ்நிலையில் ஊரடங்கு தளர்த்தப்பட்டாலும் அத்தியாவசியத் தேவைகளுக்காக வெளியே வருபவர்களைத் தவிர ஏனையவர்கள் இயலுமானவரை வெளியில் நடமாடுவதைத் தவிர்த்துக் கொள்வது நல்லது. மேலும் நாட்டில் கொரோனா அபாயம் முற்றாக நீங்கும் வரை ஏனைய மாவட்டங்களிலும் வெளியில் நடமாடுவதை இயன்றவரை குறைத்துக்கொள்ளுங்கள். மிகவும் அவசியமான தேவைகளற்று வெளியில் செல்வது, சிறு சிறு விடயங்களுக்காக பல தடவை வெளியில் செல்வது போன்றவற்றை தவிர்த்துக் கொள்ளுங்கள்.”

– இவ்வாறு வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவக் கலாநிதி ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:-

“சன நெருக்கமான இடங்கள், சன நெருக்கமான போக்குவரத்துச் சேவைகள் போன்றவற்றை இயன்றவரை தவிர்த்துக் கொள்ளுங்கள். தவிர்க்கமுடியாத இடத்து அத்தியாவசிய தேவை கருதி வெளியில் செல்வதாயின் கட்டாயமாக ஒரு மீற்றர் சமூக இடைவெளியைப் பேணவும்.

பொதுப் போக்குவரத்து சேவையிலீடுபடும் வாகனங்கள் அனைத்திலும் அனுமதிக்கப்பட்டுள்ள பயணிகளின் எண்ணிக்கையில் அரைவாசிப் பேர்  மட்டுமே பயணம் செய்ய வேண்டும். அனைத்து வாகனங்களையும் தினமும் கிருமித் தொற்று நீக்கத்துக்கு உட்படுத்தவும்.

அலுவலகங்கள், தனியார் நிறுவனங்கள், ஏனைய பொது மக்கள் அல்லது பணியாளர்கள் எனப் பலர் கூடக்கூடிய இடங்களில் பொருத்தமான, கைகழுவும்  உரிய வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பதுடன் அவற்றைக் கட்டாயமாக்கிக் கொள்ளவும். மேலும் தனிநபர்களுக்கிடையிலான சமூக இடைவெளியை பேணுவதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.

ஒன்றுகூடல்கள், கூட்டங்கள், சுற்றுலாக்கள், சமய நிகழ்வுகள், பொது வழிபாடுகள், கோயில் திருவிழாக்கள், விளையாட்டு நிகழ்வுகள், வீட்டு வைபவங்கள் போன்றவை மறு அறிவித்தல் வரை தடைசெய்யப்பட்டுள்ளன என்பதை அறிந்துகொள்ளுங்கள்.

நீண்ட நாள்களுக்குப் பின் ஊரடங்கு தளர்த்தப்படவுள்ளதால் பெருமளவானோர் முடி திருத்தகங்களை நாடவேண்டியிருக்கும். இங்கும் சமூக இடைவெளியைப் பேணவும்.

வெளியில் சென்று, வீட்டுக்குத் திரும்பும்போதெல்லாம் நன்றாக குளித்தல் நல்லது. ஆகக் குறைந்தது கைகளையாவது சரியான முறையில் ஓடும் நீரில் சவர்க்காரம் கொண்டு கழுவுங்கள். வீட்டில் உள்ளபோதும் அடிக்கடி கைகளை உரிய முறையில் கழுவுங்கள். மேலும் கண், மூக்கு, வாய், முகம் போன்றவற்றைத் தொடுவதைத் தவிர்த்துக்கொள்ளுங்கள்.

உங்களுக்கு கொரோனா தொற்றுக்குரிய அறிகுறிகளாகிய தொண்டை நோ, வறட்டு இருமல், காய்ச்சல் போன்ற அறிகுறிகள் ஏதும் ஏற்பட்டால் முகக் கவசம் அணிந்து கொண்டு உடனடியாக அருகிலுள்ள அரச மருத்துவமனையை அணுகுங்கள்” – என்றுள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.