யாழ்ப்பாணத்தில் ஊரடங்கு இல்லை என்ற எண்ணம் மக்களுக்கு வேண்டாம்- யாழ். ஆயர்

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் ஊரடங்கு இல்லை என்ற எண்ணம் இருக்கக் கூடாது வேண்டாம் என்று யாழ்ப்பாணம் மறைமாவட்ட ஆயர் கலாநிதி ஜஸ்ரின் ஞானப்பிரகாசம் ஆண்டகை கேட்டுள்ளார்.

இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள ஊடக அறிக்கையில், “கடந்த ஒரு மாத காலமாக வீட்டோடு வாழ்ந்து எமது சமூக சூழமைவில் கொரோனா வைரஸ் தாக்கத்தை நாம் ஓரளவு கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்துள்ளோம்.

பெரிதும் பாதிப்புக்குள்ளான மாவட்டங்களில் யாழ்ப்பாணம் மாவட்டமும் ஒன்றாகும். இந்நிலையில் நாம் இதுவரை பெரிதும் பாதிக்கப்படவில்லை. அதற்கான காரணம் மக்களாகிய நீங்கள் அரசாங்கத்தின் அறிவுறுத்தலுக்கு அமைவாக கீழ்ப்படிந்து வாழ்ந்தமையே ஆகும்.

இன்று யாழ்ப்பாணத்தில் அரசாங்கம் மீண்டும் ஊரடங்கைத் தளர்த்தியுள்ள நிலையில், மக்கள் கூடுதலான எண்ணிக்கையில் செறிவாகக் கூடிவருவதை அவதானிக்க முடிகிறது. அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம், மாவட்டச் செலயகம், யாழ்ப்பாணம் கட்டளைத் தளபதி போன்றோர் யாழ். மாவட்டத்தில் ஊரடங்கை அவசரமாகத் தளர்த்த வேண்டாம் எனக்கோரிய போதிலும் அரசாங்கம் இம்முடிவை எடுத்துள்ளது.

ஆகவே கொவிட்-19 இன் அச்சுறுத்தல் இன்னும் யாழில் உண்டு என்பதே உண்மை நிலையாகும். எனவே ஊரடங்கு இல்லை என்ற எண்ணம் யாழ். மக்களாகிய எமக்கு வேண்டாம்.

எதிர்வரும் இரு வாரங்களுக்காவது தொடர்ந்து விழிப்பாக இருப்போம். மத வழிபாடுகள், பொது ஒன்றுகூடல்கள், வீண் களியாட்டங்கள், விளையாட்டுப் போட்டிகள் என்பவற்றை இக்காலத்தில் தவிர்த்துக்கொள்வோம்.

அவசர தேவைகளுக்கு மட்டும் வீட்டில் உள்ள ஒருவரோ அல்லது இருவரோ வெளியில் சுகாதார வழிமுறைகளைப் பேணிப் பயணிப்போம். முகக்கவசம் அணிவோம். சமூக இடைவெளிகளைக் கடைப்பிடிப்போம்.

நாம் சுய கட்டுப்பாட்டுடன் வாழ்வதன் வழியாக சமூக நலனைப் பேணுகின்றோம் என்ற உணர்வை இக்காலத்தில் மேம்படுத்துவோம்” என்று குறிப்பிட்டுள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.