மதுபானசாலைகள் பொலிஸாரின் தலையீட்டுடன் இழுத்து மூடப்பட்டன!!!

க.கிஷாந்தன்

மலையக நகரங்களிலுள்ள மதுபானசாலைகள் பொலிஸாரின் தலையீட்டுடன் இன்று இழுத்து மூடப்பட்டன.

கடந்த 20 ஆம் திகதி முதல் ஊரடங்கு சட்டம் இலகுபடுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் இக்காலப்பகுதியில் மதுபானசாலைகளை திறப்பதற்கும் அனுமதி வழங்கப்பட்டிருந்தது.

இதனால் நேற்றைய தினம் மதுபான விற்பனை நிலையங்களுக்கு முன்னால் பெருமளவானவர்கள் அணிதிரண்டு நின்றனர். சில இடங்களில் சமூக இடைவெளிகூட பின்பற்றப்படவில்லை.

இவை உட்பட மேலும் சில காரணங்களை கருத்திற்கொண்டு மதுபானசாலைகளை மறு அறிவித்தல் விடுக்கபடும் வரை மூடுமாறு இன்று காலை 8.30 மணிக்கு பின்னர் உத்தரவிடப்பட்டிருந்தது.

எனினும், உத்தரவு வெளியாவதற்கு முன்னர் பல இடங்களில் மதுபானசாலைகள் திறக்கப்பட்டிருந்தன. சாராய வகைகளை வாங்குவதற்காக பெருமளவானோர் திரண்டிருந்தனர்.

இந்நிலையில் உத்தரவு வெளியான பின்னர், திறக்கப்பட்டிருந்த மதுபானசாலைகளை மூடுமாறு அறிவிக்கப்பட்டது.

ஆனாலும் பெரும்பாலானவர்கள் மூடவில்லை. வாங்குவதற்கு நின்றவர்களும் விலகவில்லை. இதனால் பொலிஸாரின் தலையீட்டுடன் மதுபான சாலைகள் மூடப்பட்டன.

மலையகத்தில் உள்ள பல நகரங்களிலும் மதுபான நிலையங்களுக்கு முன்னால் திரண்டிருந்தவர்களை அகற்றிவிட்டு, மூடுவதற்கு பொலிஸார் நடவடிக்கை எடுத்தனர்.

 

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.