யாழில் கடந்த 4 மாதங்களில் இடம்பெற்ற கொள்ளை – 5 பேர் கைது

வல்வெட்டித்துறையில் கடந்த 4 மாதங்களில் இடம்பெற்ற வெவ்வேறு 4 கொள்ளை மற்றும் திருட்டுச் சம்பவங்களுடன் தொடர்புடைய இரண்டு சிறுவர்கள் உட்பட 5 பேர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேக நபர்களிடமிருந்து 10 பவுண் தங்க நகைகள், பணம், நகை அடகு பற்றுச்சீட்டுக்கள், மற்றும் அலைபேசிகள் என்பன மீட்கப்பட்டுள்ளன.

சம்பவத்தில் வல்வெட்டித்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட 15 வயதுடைய சிறுவர்கள் இருவர் உள்பட 18, 21 மற்றும் 25 வயதுடைய சந்தேக நபர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டனர் என்றும் அவர்களில் இருவர் சகோதரர்கள் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வல்வெட்டித்துறையில் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் கடந்த நான்கு மாதங்களில் 4 வெவ்வேறு கொள்ளை மற்றும் திருட்டுச் சம்பவங்கள் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்திருந்தனர்.

அவற்றில் ஒரு வீட்டில் அந்த வீட்டு சிறுவனும் நட்புக் கொண்ட சந்தேக நபர்கள், அவனிடம் சிகரெட்டை வழங்கி பிடிக்க வைத்து படம் எடுத்துள்ளனர். அந்தப் படத்தை வைத்து மிரட்டி அந்தச் சிறுவனின் தாயாரின் நகைகளை எடுத்துவரச் சொல்லி பறித்தெடுத்துள்ளனர்.

இவ்வாறு சந்தேக நபர்கள் சிறுவனை குறிப்பிட்ட காலத்துக்கு மிரட்டி வந்ததுடன், அவனின் தாயாரின் 14 பவுண் நகைகள், ஐபாட் மற்றும் 50 ஆயிரம் ரூபாய் பெறுமதியான கனேடியன் டொலர்களைப் பறித்து எடுத்துள்ளனர்.

அந்தச் சம்பவம் தொடர்பான விசாரணையிலேயே சந்தேக நபர்கள் ஐவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். இதன்போது பொலிகண்டி, இலக்கணாவத்தை மற்றும் வல்வெட்டித்துறைச் சேர்ந்த இரண்டு சிறுவர்கள் உள்பட ஐவர் கைது செய்யப்பட்டனர்.

அவர்களிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளில் உருக்கப்பட்ட தங்கம் உள்பட 10 தங்கப் பவுண் நகைகள், 10 ஆயிரம் ரூபா பணம், 2 அலைபேசிகள், ஒரு ஐபாட் மற்றும் அரச மற்றும் தனியார் வங்கிகளில் கொள்ளையிட்ட நகைகளை அடகு வைத்த பற்றுசீட்டுக்கள் என்பன மீட்கப்பட்டன.

சந்தேக நபர்கள், கொள்ளையிட்ட நகைகளில் பலவற்றை உடுப்பிட்டியைச் சேர்ந்த குடும்பப் பெண் ஒருவருக்கு மிகக் குறைந்த பணத்துக்கு விற்பனை செய்துள்ளனர்.

அந்தப் பெண் அவற்றை கூடிய தொகைக்கு அடகு வைத்துள்ளார். இந்த நிலையில் மேலதிக விசாரணைகளை வல்வெட்டித்துறைப் பொலிஸார் தெரிவித்தனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.