தேர்தலுக்கான திகதியை மீள் பரிசீலனை செய்ய ஆணைக்குழு தீர்மானம் – மஹிந்த

ஜூன் மாதம் 20 ஆம் திகதியை பொதுத் தேர்தலுக்கான திகதியை மீள் பரிசீலனை செய்வதற்காக எதிர்வரும் மே மாதம் முதல் வாரத்தில் தேர்தல்கள் ஆணைக்குழு அதிகாரிகள் கூடி மீண்டும் ஆராயவுள்ளதாக ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

பொதுத் தேர்தலுக்கான திகதியை மீள் பரிசீலனை செய்யுமாறு அரசியல் கட்சிகள் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு கோரிக்கை விடுத்ததை அடுத்தே திகதியை மீள் பரிசீலனை செய்ய தேர்தல்கள் ஆணைக்குழு இணக்கம் தெரிவித்துள்ளது.

ஜூன் மாதம் 20 ஆம்  திகதி பொதுத் தேர்தலை நடத்துவதற்கான திகதியாக தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்திருந்த நிலையில் அதற்கான வர்த்தமானி அறிவித்தல் நேற்று முன்தினம் நள்ளிரவு வெளியிடப்பட்டது.

இந்நிலையில் நேற்று (செவ்வாய்க்கிழமை) அரசியல் கட்சிகளின் செயலாளர்கள் தேர்தல்கள் ஆணைக்குழு உறுப்பினர்களை சந்தித்து இரண்டு கட்டமாக கலந்துரையாடலில் ஈடுபட்டனர்.

இதன்போது தற்போதைய நெருக்கடியில் தேர்தல்கள் ஆணைக்குழு ஒரு தினத்தை தேர்தல் நடத்த அறிவித்துள்ள போதிலும் இது உறுதியான நிலைப்பாடு அல்ல என்றும் தேர்தல் திகதி ஒன்றினை அறிவிக்காது இருக்க முடியாது என்பதனால் தான் நாம் திகதி ஒன்றினை இப்போது அறிவித்துள்ளோம் என மஹிந்த தேசப்பிரிய சுட்டிக்காட்டினார்.

மே மாதம் 4 ஆம் திகதியில் இருந்து அதிகபட்சம் 49 நாட்களுக்குள்வரும் திகதியொன்றை நாம் கூறியுள்ள போதிலும், நாட்டின் கொரோனா வைரஸ் தொற்றுநோய் பரவலை கட்டுப்படுத்த முடியாது போனால் இந்த திகதியிலும் மாற்றங்களை செய்ய நேரிடும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

மே மாதம் 30 ஆம் திகதி தேர்தலை நடத்த வேண்டும் என ஒரு சிலர் கூறுகின்றனர். அரசியல் அமைப்பினை காரணம் காட்டி சிலர் பேசுகின்றனர். ஆனால் அரசியல் அமைப்பிற்கு நாம் பொறுப்புக்கூற வேண்டும் என்பது உண்மையே, ஆனால் அதனையும் தாண்டி மக்களின் உயிரை பாதுகாக்க வேண்டியது எம் அனைவரதும் கடமையாகும் என்றும் அவர் தெரிவித்தார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.