சிக்கிய மாணவர்களை அழைத்துவர நேபாளத்துக்குச் சென்றது விமானம்!

உயர்கல்வியைத் தொடர்வதற்காகச் சென்று, கொரோனா வைரஸ் பரவல் காரணமாக, நேபாளத்தில் சிக்கிய இலங்கை மாணவர்களை அழைத்து வருவதற்காக, ஶ்ரீலங்கன் விமன சேவைக்குச் சொந்தமான விசேட விமானமொன்று நேபாளம் நோக்கிச் சென்றுள்ளது.

UL 1424 எனும் குறித்த விமானம் இன்று (24) காலை 8 மணிக்கும் கட்டுநாயக்கா சர்வதேச விமான நிலையத்திலிருந்து, நேபாளத்தின் காத்மண்டு நோக்கிப் புறப்பட்டது.

இவ்விமானம் 8 விமான சேவை பணியாளர்களுடன் அங்கு சென்றுள்ளது.

குறித்த விமானம்  இலங்கை மாணவர்களை ஏற்றிக் கொண்டு இன்று மாலை 4.45 மணியளவில் கட்டுநாயக்கா விமான நிலையத்தை மீண்டும் வந்தடையவுள்ளது.

இதேவேளை, இந்தியாவில் சிக்கியுள்ள மற்றுமொரு இலங்கை மாணவர்கள் குழுவை அழைத்து வருவதற்காக நாளை  மற்றுமொரு விசேட விமானமொன்று மும்பாய் நோக்கிப் புறப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

நேற்று இந்தியாவின் அமிர்தசரஸ் நகரிலிருந்து 101 மாணவர்கள் இலங்கைக்கு அழைத்து வரப்பட்டனர்.

சார்க் நாடுகளில் சிக்கிய மாணவர்களை அழைத்து வரும் நடவடிக்கைகளின் முதல் கட்டமாக, கடந்த 21ஆம் திகதி பாகிஸ்தானின் லாஹூரிலிருந்து 93 பேரும், கராச்சியிலிருந்து 20 பேரும் என 113 பேர் இலங்கைக்கு அழைத்து வரப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இவ்வாறு அழைத்து வரப்பட்டோர் கட்டாய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.