‘கொரோனா’வின் பிடிக்குள் 143 கடற்படையினர் இலக்கு – மக்கள் அச்சப்படக் கூடாது என்கிறார் இராணுவத் தளபதி சவேந்திர சில்வா

வெலிசறை கடற்படை முகாமையைச் சேர்ந்த 143 சிப்பாய்கள் கொரோனா வைரஸ் தொற்றுடன் இதுவரை அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இந்தத் தகவலை கொரோனா வைரஸ் கட்டுப்பாட்டுக்கான தேசிய செயற்பாட்டு மையத்தின் தலைவரும் இராணுவத் தளபதியுமான லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா உறுதிப்படுத்தினார்.

நேற்று மட்டும் 53 கடற்படையினர் கொரோனா தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளனர் எனவும் அவர் குறிப்பிட்டார்.

கொரோனா நோயாளர் எண்ணிக்கை அதிகரிப்பதால் மக்கள் பயப்படத் தேவையில்லை எனவும் அவர் கூறினார்.

இது தொடர்பாக அவர் தெரிவித்ததாவது:-

“வெலிசறை கடற்படை முகாமுக்குள் கொரோனா வைரஸ் பரவியதையடுத்து அங்குள்ள சிப்பாய்கள் அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இதுவரை 143 சிப்பாய்கள் கொரோனாத் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அவர்களில் 84 பேர் வெலிசறை கடற்படை முகாமுக்குள் நடத்தப்பட்ட பி.சி.ஆர். பரிசோதனையின்போது அடையாளம் காணப்பட்டுள்ளனர். ஏனைய 59 பேரும் விடுமுறையில் வீடுகளுக்குச் சென்றிருந்த நிலையில் வைத்தியசாலைகளில் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

நேற்று மட்டும் 53 கடற்படையினர் அடையாளம் காணப்பட்டனர். இவர்களில் 16 பேர் முகாமிலும், 37 பேர் விடுமுறையில் இருந்தபோதும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

அதேவேளை, வெலிசறை கடற்படை முகாமில் பி.சி.ஆர். பரிசோதனை தொடர்ந்து இடம்பெற்று வருகின்றது. விடுமுறையில் சென்ற சிப்பாய்களும் மீள அழைக்கப்பட்டுள்ளனர்.

நோயாளர் எண்ணிக்கை அதிகரிப்பதால் மக்கள் பயப்படத் தேவையில்லை. சில இடங்களில் கொரோனா நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டாலும் அது எல்லோருக்கும் பரவும் என்று அர்த்தமில்லை. சிலர் எங்களுக்குத் தகவல்களை மறைத்தாலும் நாங்கள் பல விடயங்களைத் தேடிக் கண்டுபிடித்துள்ளோம். நாங்கள் மருத்துவர்களின் உதவியுடன் பரவலைத் தடுத்து வருகின்றோம். மக்கள் அச்சப்படக் கூடாது.

கொழும்பு, பண்டாரநாயக்க மாவத்தையைச் சேர்ந்த பலர் தனிமைப்படுத்தல் நிலையங்களில் இருந்தே அடையாளம் காணப்பட்டுள்ளனர். நீர்கொழும்பைச் சேர்ந்தவர்களும் தனிமைப்படுத்தல் நிலையங்களில் கொரோனாத் தொற்றுடன் அடையாளம் காணப்படுகின்றனர்” – என்றார்.

 

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.