ராஜபக்சக்களின் கோட்டைக்குள்ளும் கொரோனா ஊடுருவல் – 21 மாவட்டங்கள் பாதிப்பு

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்காகிய மாவட்டங்கள் 21ஆக உயர்ந்துள்ளது.

வெலிசறை கடற்படை முகாமில் இருந்து விடுமுறையில் வீடு சென்ற சிப்பாய்கள் தமது சொந்த மாவட்டங்களிலுள்ள வைத்தியசாலைகளில் கொரோனா வைரஸ் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டு வருவதால் அவர்களின் மாவட்டங்களும் பாதிப்பில் உள்ளடக்கப்பட்டு வருகின்றன.

அதற்கமைய ராஜபக்சக்களின் கோட்டையான அம்பாந்தோட்டை மற்றும் திருகோணமலை ஆகிய மாவட்டங்களும் கொரோனாவால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களுக்குள் புதிதாக இணைந்துள்ளன.

சுகாதார அமைச்சு இன்று வெளியிட்டுள்ள அறிக்கையின் பிரகாரம் கொழும்பு மாவட்டத்தில் 155 பேரும், களுத்துறை மாவட்டத்தில் 63 பேரும், புத்தளம் மாவட்டத்தில் 39 பேரும், கம்பஹா மாவட்டத்தில் 41 பேரும், யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 16 பேரும், குருநாகல் மாவட்டத்தில் 15 பேரும், கண்டி மாவட்டத்தில் 11 பேரும், அநுராதபுரம் மாவட்டத்தில் 10 பேரும், இரத்தினபுரி மற்றும் கேகாலை மாவட்டங்களில் தலா 7 பேர் வீதமும், மொனராகலை மாவட்டத்தில் 4 பேரும், அம்பாந்தோட்டை மாவட்டத்தில் 3 பேரும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அத்துடன், அம்பாறை, மாத்தறை, பதுளை மற்றும் வவுனியா ஆகிய மாவட்டங்களில் தலா 2 பேர் வீதமும், காலி, மட்டக்களப்பு, பொலனறுவை, மாத்தளை மற்றும் திருகோணமலை ஆகிய மாவட்டங்களில் தலா ஒருவர் வீதமும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

நுவரெலியா, மன்னார், கிளிநொச்சி, முல்லைத்தீவு ஆகிய நான்கு மாவட்டங்களில் இன்னும் எவரும் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்படவில்லை.

இதனிடையே வெளிநாடுகளிலிருந்து நாடு திரும்பியவர்களைத் தனிமைப்படுத்தும் நிலையங்களில் 41 பேரும், வெளிநாட்டுப் பிரஜைகள் 03 பேரும், வெலிசறை கடற்படை முகாமிலுள்ள தனிமைப்படுத்தல் நிலையத்தில் 95 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.