வடக்கில் மேலும் 53 பேருக்கு பரிசோதனை: எவருக்கும் வைரஸ் தொற்று இல்லை!

வடக்கு மாகாணத்தின் ஐந்து மாவட்டங்களில் இருந்தும் பல இடங்களைச் சேர்ந்த 53 பேருக்கு நேற்று மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகூடப் பரிசோதனைகளில் எவருக்கும் தொற்று இல்லையென உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக யாழ். போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர் வைத்தியர் த.சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.

கொரோனா தொற்று சந்தேகத்தின் அடிப்படையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்படுபவர்கள் மற்றும் தனிமைப்படுத்தப்பட்டவர்களுக்கு யாழில் ஆய்வுகூடப் பரிசோதனைகள் நடத்தப்பட்டு வருகிறது.

இதற்கமைய யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, மன்னார், வவுனியா என வடக்கின் ஐந்து மாவட்டங்களைச் சேர்ந்த 53 பேருக்கு நேற்று (புதன்கிழமை) யாழ். பல்கலைக்கழக மருத்துவ பீடத்தில் ஆய்வுகூடப் பரிசோதனை நடத்தப்பட்டது.

யாழ்.போதனா வைத்தியசாலை அனுமதிக்கப்பட்டவர்கள் 10 பேர், போதனா வைத்தியசாலை வெளிநோயாளர் பிரிவில் பரிசோதிக்கப்பட்டவர்கள் 5 பேர், வவுனியா பொது வைத்தியசாலையில் 7 பேர், கிளிநொச்சி பொது வைத்தியசாலையில் ஒருவர், முல்லைத்தீவு பொது வைத்தியசாலையில் ஒருவர் மற்றும் மன்னார் மாவட்டத்தைச் சேர்ந்த 29 பேர் என மொத்தமாக 53 பேருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில் எவருக்கும் தொற்று இல்லையென உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இதேவேளை, அவர் இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில் இதுவரை யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு 148 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

இவ்வாறு பரிசோதனை மேற்கொண்டவர்களில் ஒருவருக்கே இதுவரை தொற்று அறியப்பட்டுள்ளதுடன் தற்போது சந்தேகத்தில் 9 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதனைவிட, வைத்தியசாலைக்கு வெளியே 569 பேருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட நிலையில் அவர்களில் 20 பேருக்கு (முழங்காவில் தனிமைப்படுத்தல் மையத்தில் கண்டுபிடிக்கப்பட்ட 4 பேர் உட்பட) தொற்று கண்டறியப்பட்டிருந்தது. அவர்களில் 5 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.