அரசாங்கத்தின் உத்தரவுகளை மீறிய குற்றச்சாட்டு: யாழில் 45 பேருக்கு நீதிமன்றம் விடுத்த உத்தரவு

ஊரடங்குச் சட்டத்தை மீறியமை, தனிமைப்படுத்தல் சட்டத்தை மதிக்காது நடந்தமை ஆகிய குற்றங்களுக்காக 45 பேருக்கு தலா 600 ரூபாய் தண்டம் விதித்து யாழ்ப்பாணம் நீதிமன்ற நீதவான் ஏ.பீற்றர் போல் உத்தரவிட்டார்.

கோப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் ஊரடங்குச் சட்டம் நடைமுறையில் உள்ள காலப்பகுதியில் வீதியில் பயணித்த 80 பேர்வரை இந்த மாதம் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டனர்.

அவர்களுக்கு எதிராக இரண்டு குற்றச்சாட்டுக்களை முன்வைத்து பொலிஸார் யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றில் இன்று (வியாழக்கிழமை) வழக்குத் தாக்கல் செய்தனர்.

பொதுமக்களின் பாதுகாப்புக்காக அரசாங்கத்தினால் நடைமுறைப்படுத்தப்பட்டிருந்த ஊரடங்குச் சட்டத்தை மீறி அத்தியாவசிய தேவைகள் ஏதுமின்றி, வேண்டுமென்று பிரதேசத்தினுள் நடமாடித் திரிந்தமையால் 1947ஆம் ஆண்டு 25ஆம் இலக்க பொதுமக்கள் பாதுகாப்புச் சட்டத்தின் மூன்றாம் பிரிவில் குறிப்பிடப்பட்டிருக்கும் மற்றும் 1959ஆம் ஆண்டு 08ஆம் இலக்க சட்டத்தினால் திருத்தப்பட்ட 16(3) உப பிரிவின் கீழ் தண்டனைக்குரிய குற்றத்தை புரிந்துள்ளதாக அறிவிக்கப்பட்டது.

இதற்கு மேலதிகமாக தொற்று நோய் பரவுவதைத் தடுப்பதற்கு தனிமைப்படுத்தப்பட்டு அல்லது தொற்று நோய் நிலவுகின்ற இடங்களுக்கும் வேறு இடங்களுக்கும் இடையிலான தொடர்பினை கட்டுப்படுத்துவதற்கு அரசாங்கத்தினால் விதிக்கப்பட்டிருக்கும் சட்டங்களைத் தெரிந்துகொண்டு அல்லது அந்தச் சட்டங்களைத் தெரிந்துகொள்ள காரணம் இருந்தும் வேண்டுமென்று அந்தச் சட்டங்களுக்குக் கீழ்ப்படியாது நடந்து கொண்டமையால் இலங்கை தண்டனைச் சட்டக்கோவை 264ஆம் பிரிவின் கீழ் தண்டனைக்குரிய குற்றத்தைப் புரித்ததாக தனிமைப்படுத்தல் சட்டத்தை மதிக்காது நடந்துகொண்டவர்களுக்கு தண்டனை அறிவிக்கப்பட்டது.

மேற்குறிப்பிடப்பட்ட குற்றச்சாட்டுக்களை முன்வைத்து 45 பேரும் யாழ்ப்பாணம் நீதிமன்றில் நீதவான் ஏ.பீற்றர் போல் முன்னிலையில் இன்று முற்படுத்தப்பட்டனர். அவருக்கு குற்றப்பத்திரம் வாசித்துக் காண்பிக்கப்பட்டது.

சந்தேகநபர்கள், தம்மீதான குற்றச்சாட்டுக்களை ஏற்றுக்கொண்ட நிலையில் அவர்களைக் குற்றவாளிகளாக இனங்கண்ட மன்று, ஊரடங்குச் சட்டத்தை மீறிய குற்றத்துக்கு 100 ரூபாய் தண்டப் பணமும், தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறியமைக்காக 500 ரூபாய் தண்டப் பணமும் என அனைவருக்கும் தலா 600 ரூபாய் தண்டம் விதித்து உத்தரவிட்டது.

இதேவேளை, இலங்கை தண்டனைச் சட்டக்கோவை 264ஆம் பிரிவின் கீழ் தொற்று நோய் பரவும் அபாயம் உள்ள இடங்களில் அரசால் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் விதிகளை அறிந்திருந்தும் அதனை மதிக்காது நடந்துகொள்ளும் நபர் ஒருவருக்கு 6 மாதங்கள் சிறைத் தண்டனை அல்லது ஆயிரத்து 500 ரூபாயை விஞ்சாத தண்டம் அல்லது சிறை மற்றும் தண்டப்பணம் அறவீடு ஆகிய தண்டனைகளை விதிக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.