சூதாட்டத்தில் ஈடுபட்ட நகரசபை தலைவர் உட்பட 7 பேர் கைது

(க.கிஷாந்தன்)

நாவலப்பிட்டிய நகரசபை தலைவர் உட்பட 7 பேர் நேற்று (30.04.2020)  மாலை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். தனிமைப்படுத்தல் சட்டவிதிமுறைகளை மீறும் வகையில் கினிகத்தேனை பகுதியிலுள்ள சுற்றுலா ஹோட்டலொன்றில் சூதாட்டத்தில் ஈடுபட்டிருந்த வேளையிலேயே இவர்கள் மடக்கிப்பிடிக்கப்பட்டுள்ளனர்.

அட்டன் பொலிஸ், ஊழல் ஒழிப்பு பிரிவுக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலொன்றின் அடிப்படையில், வட்டவளை மற்றும் கினிகத்தேனை பொலிஸார் இணைந்து குறித்த சுற்றுலா விடுதியை நேற்று மாலை 6.30 மணியளவில் சுற்றிவளைத்தனர்.

பொலிஸாரின் முற்றுகையையடுத்து அங்கிருந்து சிலர் தப்பியோடியுள்ளனர். அவர்களை கைதுசெய்வதற்கான தேடுதல் வேட்டை தொடர்கின்றது.

சூதாட்டத்துக்காக பயன்படுத்தப்பட்டிருந்த 60 ஆயிரம் ரூபா பணம், மதுபான போத்தல்கள், நகரசபை தலைவரின் சொகுசு வாகனம் மற்றும் அவரின் சகாக்கள் பயணித்த வாகனம் ஆகியவற்றையும் பொலிஸார் கைப்பற்றினர்.

கைதானவர்கள் இன்றைய தினம் (01.05.2020) அட்டன் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர்.

நாவலப்பிட்டிய நகரசபையானது ஐக்கிய தேசியக்கட்சியின் ஆட்சி அதிகாரத்தின் கீழ் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.