ஜூன் 20 தேர்தல் நடக்காது! – பெரும் சிக்கலில் வேட்புமனுக்கள்!

ஒன்பதாவது நாடாளுமன்றத் தேர்தலுக்கான ஏற்றுக் கொள்ளப்பட்ட வேட்புமனுக்களின் சட்ட ரீதியான வலு தொடர்பில் கேள்வி எழுந்துள்ளது. இதன் காரணமாக ஜூன் 20 ஆம் திகதி பெரும்பாலும் தேர்தல் நடக்காது என்று தெரிவிக்கப்படுகின்றது.

தேர்தல்கள் ஆணைக்குழுவினருக்கும், அரசியல் கட்சிகளின் செயலர்களுக்கும் இடையில் தேர்தல்கள் செயலகத்தில் இன்று காலை கலந்துரையாடல் இடம்பெற்றது. இந்தக் கலந்துரையாடலில் பல்வேறு விடயங்கள் ஆராயப்பட்டன.

இப்போது நாடாளுமன்றத் தேர்தல் நடத்த வேண்டாம் என்று இன்றைய கூட்டத்தில் கலந்து கொண்ட கட்சித் தலைவர்கள் வலியுறுத்தினர்.

ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி மற்றும் வாசுதேவ நாணயக்கார தலைமையிலான கட்சி ஆகிய மாத்திரமே தேர்தல் பிற்போடப்படுவதை எதிர்த்தன. திகதி அறிவிக்கப்படாமல் தேர்தல் ஒத்திவைக்கப்பட வேண்டும் என்று ஏனைய கட்சிகள் வலியுறுத்தின.

மேலும் நாளை மறுதினம் 4ஆம் திகதி வேட்பாளர்களுக்கான விருப்பு இலக்கங்கள் வழங்கப்படும் என்று முன்னர் அறிவிக்கப்பட்டிருந்தாலும் தற்போது அது வழங்கப்படாது என்று தேர்தல்கள் ஆணைக்குழு தவிசாளர் அறிவித்தார்.

வேட்பு மனு விவகாரம்

நாடாளுமன்றத் தேர்தலுக்கான வேட்புமனுக்களை மார்ச் மாதம் 12ஆம் திகதியிலிருந்து 19ஆம் திகதி வரை தாக்கல் செய்ய முடியும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. கொரோனாத் தாக்கம் காரணமாக மார்ச் மாதம் 16ஆம் திகதி விடுமுறை என்று அரசு அறிவித்திருந்தது. அன்றைய தினம் வேட்புமனுத் தாக்கல் இடம்பெறாது என்று தேர்தல்கள் ஆணைக்குழுவும் அறிவித்திருந்தது. மார்ச் 17ஆம், 18ஆம் மற்றும் 19ஆம் திகதிகளில் வேட்புமனுத் தாக்கல் இடம்பெற்றது. இந்தத் திகதிகளிலேயே நாடு முழுவதும் முக்கிய அரசியல் கட்சிகள் எல்லாம் வேட்புமனுக்களைத் தாக்கல் செய்திருந்தன.

ஆனால் இந்த மூன்று திகதிகளும் விசேட பொதுவிடுமுறையாக பொதுநிர்வாக உள்நாட்டலுவல்கள் அமைச்சரால் மார்ச் 17ஆம் திகதியிடப்பட்டு வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது. இந்த விடயம் தற்போதே தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கும் தெரியவந்துள்ளதாக தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய குறிப்பிட்டுள்ளார்.

விடுமுறை அறிவிக்கப்பட்ட நாள்களில் தாக்கல் செய்யப்பட்ட வேட்பு மனுக்களின் வலுத் தொடர்பில் சட்டரீதியான சிக்கல் எழுந்துள்ளது. இந்த மூன்று நாள்களிலும் தாக்கல் செய்யப்பட்ட வேட்புமனுக்கள் மீண்டும் தாக்கல் செய்ய வேண்டிய நிலைமை ஏற்படும் என்றும், இதன் காரணமாக ஜூலை 20ஆம் திகதி தேர்தல் நடத்தப்படாது என்றும் தேர்தல்கள் திணைக்கள வட்டாரங்கள் தகவல் வெளியிட்டன.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.