கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 705 ஆக அதிகரிப்பு!

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி மேலும் 15 பேர்  அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதையடுத்து தொற்றுக்குள்ளாகியவர்களின் மொத்த எண்ணிக்கை 690 இலிருந்து 705 ஆக அதிகரித்துள்ளது என சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.

இதேவேளை, தொற்றுக்குள்ளாகியவர்களில் மேலும் 10 பேர் இன்று குணமடைந்துள்ளனர். அதற்கமைய தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 162 இலிருந்து 172 ஆக அதிகரித்துள்ளது.

கடந்த 24 மணித்தியாலங்களில் 15 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். கொழும்பு தேசிய தொற்று நோய் தடுப்பு வைத்தியசாலையிலிருந்து 07 பேரும், வெலிக்கந்தை ஆதார வைத்தியசாலையிலிருந்து 07 பேரும், இரணவில வைத்தியசாலையிலிருந்து ஒருவரும் குணமடைந்துள்ளனர்.

அந்தவகையில், இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றியதாக அடையாளம் காணப்பட்டுள்ள 702 பேரில் தற்போது 523 நோயாளிகள் 07 வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

அவர்கள் கொழும்பு தேசிய தொற்று நோய் தடுப்பு வைத்தியசாலை, கொழும்பு கிழக்கு முல்லேரியா ஆதார வைத்தியசாலை, காத்தான்குடி ஆதார வைத்தியசாலை, பொலனறுவை வெலிக்கந்தை ஆதார வைத்தியசாலை, ஹோமாகம ஆதார வைத்தியசாலை, சிலாபம் இரணவில வைத்தியசாலை மற்றும் வெலிசறை கடற்படை முகாமில் அமைந்துள்ள வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதேவேளை, மேலும் 179 பேர் 30 வைத்தியசாலைகளில் கொரோனா வைரஸ் தொற்று சந்தேகத்தில் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர் என்று சுகாதார அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.