டெங்கு நோய் தொடர்பாகவும் அவதானம் வேண்டும் – சுகாதார அமைச்சு எச்சரிக்கை

வரவிருக்கும் தென்மேற்கு பருவமழை காலத்தில் டெங்கு நோயாளிகளின் அதிகரிப்பு தொடர்பாகவும் நாடு தயார் நிலையில் இருக்க வேண்டும் என்று சுகாதார மற்றும் சுதேச மருத்துவ சேவைகள் அமைச்சு எச்சரித்துள்ளது.

இது குறித்து கருத்து தெரிவித்த சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியராச்சி “முழு நாட்டின் கவனமும் இப்போது கொரோனா வைரஸ் தொற்று நோய்களில் உள்ளது; எவ்வாறாயினும், வரவிருக்கும் டெங்கு காச்சலுக்கு நாங்கள் தயாராக இருக்க வேண்டும்.

எதிர்வரும் நாட்களில், டெங்குவை ஒழிப்பதற்கும், நுளம்பு இனப்பெருக்கம் செய்யக்கூடிய இடங்களை ஆய்வு செய்வதற்கும் ஒரு திட்டம் செயற்படுத்தப்படும்” என தெரிவித்தார்.

மேலும் மழைக்காலம் தொடங்குவதற்கு முன்னர் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை நாங்கள் எடுக்காவிட்டால், சுகாதார அமைச்சு இரட்டைச் சுமையைச் சுமக்க வேண்டியிருக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

நாட்டில் டெங்கு பாதிப்பு பற்றிய கடந்தகால புள்ளி விபரங்கள், மே-செப்டம்பர் மற்றும் டிசம்பர்-பெப்ரவரி முதல் பருவமழை காலங்களில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கையில் அதிகரிப்பை காட்டுகின்றன.

இலங்கை முழுவதிலும் இந்த ஆண்டு ஜனவரியில் இருந்து அதிக எண்ணிக்கையிலான டெங்கு நோயாளிகள் சுமார் 11,595 பேர் பதிவாகியுள்ளனர். ஆயினும்கூட, எண்ணிக்கை குறைந்து வருகிறது, ஏப்ரல் மாதத்தில், நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் குறைந்த மழைப்பொழிவு காரணமாக 383 டெங்கு நோயாளிகள் மட்டுமே பதிவாகியுள்ளனர்.

இருப்பினும், தற்போது நடைமுறையில் உள்ள ஊரடங்கு உத்தரவு காரணமாக பெரும்பாலான நிறுவனங்கள் வெறிச்சோடி காணப்படுவதால், நுளம்பு இனப்பெருக்கம் செய்யும் எண்ணிக்கையும் அதிகரிக்க சாத்தியக்கூறுகள் உள்ளன என்று அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.