ஊரடங்குவேளையில் கொட்டகலையில் மதுபானசாலை உடைக்கப்பட்டு கொள்ளை!

(க.கிஷாந்தன்)

 

திம்புள்ள  – பத்தன பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கொட்டகலை நகரில் அமைந்துள்ள மதுபான விற்பனை நிலையமொன்று இன்று (04.05.2020) அதிகாலை உடைக்கப்பட்டு, மதுபான போத்தல்கள் களவாடப்பட்டுள்ளன.

 

நாடுதழுவிய ரீதியில் அமுல்படுத்தப்பட்டிருந்த பொலிஸ் ஊரடங்கு சட்டம் இன்று காலை 5 மணிக்கே தளர்த்தப்பட்டது. எனினும், ஊரடங்கு அமுலில் இருந்த காலப்பகுதியிலேயே – அதாவது அதிகாலை 1.30 மணியளவிலேயே குறித்த மதுபான விற்பனை நிலையம் உடைக்கப்பட்டுள்ளது.

 

களவாடப்பட்ட மதுபான போத்தல்களை, பெட்டியில் போட்டுக்கொண்டு மதுபான சாலைக்கு அருகில் இருந்த குறுக்கு வழியொன்றின் ஊடாக இவர்கள் தப்பிச்சென்றுள்ளனர்.

 

இவ்வாறு தப்பிச்செல்லும் வேளையில், அவ்வழியில் இருந்த வீடொன்றில் பொறுத்தப்பட்டிருந்த சி.சி.ரீவி கமராவில் காட்சிகள் பதிவாகியுள்ளன.

 

வீடொன்றின் மதில் மீது ஏறி தப்பிச்செல்ல முற்படும் காட்சிகள் விளங்கினாலும், மின் விளக்கின் எதிர்திசை ஒளி காரணமாக நபர்களின் முகங்களை சரிவர அடையாளம் காணமுடியவில்லை.

 

இந்நிலையில் கொள்ளையில் ஈடுபட்ட நபர்களை கைது செய்வதற்கான தேடுதல் வேட்டையை திம்புள்ள – பத்தன பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.

 

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.