வேட்பு மனுக்களின் செல்லுபடித் தன்மை குறித்து சர்ச்சை – மீண்டும் கூடி கலந்துரையாட தேர்தல்கள் ஆணைக்குழு தீர்மானம்

வேட்பு மனுக்களின் செல்லுபடித் தன்மை குறித்து தற்போது சர்ச்சை எழுந்துள்ள நிலையில் எதிர்வரும் 12 ஆம் திகதி தேர்தல்கள் ஆணைக்குழு மீண்டும் கூடி கலந்துரையாடவுள்ளது.

இது குறித்து ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு கருத்து தெரிவித்துள்ள தேர்தல் ஆணைக்குழு உறுப்பினர் பேராசிரியர் ரட்னஜீவன் ஹூல், ஆணைக்குழு வழக்கம் போல் தேர்தலுக்கு தயாராகி வருகிறது என கூறினார்.

மேலும் மார்ச் மாதத்தில் பொது விடுமுறை நாட்களில் ஏற்றுக்கொள்ளப்பட்ட வேட்பு மனுக்களின் செல்லுபடித் தன்மை குறித்து சட்டமா அதிபரின் கருத்தை கோருவதற்கு தேர்தல்கள் ஆணைக்குழு முடிவு செய்துள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.

ஒரு அரசியல் கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் பிரதிநிதி எழுப்பிய சந்தேகங்கள் பின்னரே சட்டமா அதிபரின் கருத்தை நாட ஆணைக்குழு தீர்மானித்துள்ளது என்றும் அவர் கூறினார்.

கொரோனா வைரஸ் மேலும் பரவாமல் தடுக்க பொது நிர்வாக அமைச்சர், விசேட வர்த்தமானி அறிவிப்பில், 17, 18, மற்றும் மார்ச் 19 ஆகிய மூன்று நாட்களை விசேட பொது விடுமுறைகள் என அறிவித்திருந்தார்.

இதற்கிடையில், கொரோனா வைரஸ் தொற்றுநோய்க்கு மத்தியில் பொதுத் தேர்தலை நடத்துவதற்கு எதிராக இடைக்கால தடை உத்தரவு கோரி உயர் நீதிமன்றில் அடிப்படை உரிமைகள் மீறல் மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது.

அதில் ஜூன் 20 ம் திகதி பொதுத் தேர்தலை நடத்துவதாக தேர்தல்கள் ஆணைக்குழு வெளியிட்டுள்ள வர்த்தமானி அறிவிப்பு அரசியலமைப்பிற்கு விரோதமானது என்றும், வர்த்தமானி அறிவிப்பை செல்லாது என்றும் உத்தரவிடக்கோரி தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இருப்பினும் வேட்பாளர்களுக்கு விருப்பு எண்ணை வழங்குவது மற்றும் ஜூன் 20 ஆம் திகதி அன்று தேர்தலை நடத்துவது நீதிமன்றத்தின் முடிவைப் பொறுத்தது என்றும் தேர்தல் ஆணைக்குழு உறுப்பினர் பேராசிரியர் ரட்னஜீவன் ஹூல் குறிப்பிட்டுள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.