தேர்தல் வெற்றிக்காக பிக்குகள் அணியினரை முன்னிலைப்படுத்தும் அரசாங்கம்- சிவமோகன் குற்றச்சாட்டு

தேர்தல் வெற்றிக்காக பௌத்த பிக்குகளை மஹிந்த அரசாங்கம் முன்னிலைப்படுத்தி வருவதாக வன்னியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் வைத்திய கலாநிதி சிவமோகன் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் நேற்று (செவ்வாய்க்கிழமை) வெளியிட்டுள்ள அறிக்கையில், “பிரதமர் மஹிந்தவினால் கூட்டப்பட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களுடனான கலந்துரையாடலில் எதிர்பாராத விதமாக பிக்குகள் அணியினர் சமூகம் தந்திருந்தனர். அவர்களுக்கு முன்வரிசையில் இடம் ஒதுக்கிக் கொடுக்கப்பட்டது.

மஹிந்த ராஜபக்ஷவும் ஜனாதிபதி கோட்டாபயவும் பிக்குகளை முன்னலைப்படுத்தி பௌத்த விகாரைகளின் ஊடாக தங்களது இரகசிய பிரசாரத்தை எடுத்துச்சென்று தேர்தலில் வெற்றிபெற முயற்சி எடுத்து வருகிறார்களா என்னும் சந்தேகம் எழுகிறது.

மேலும், இந்தக் கூட்டத்தில் மதகுருமாரை அழைத்துவரும் முயற்சி இருந்திருந்தால் இந்து, கிறிஸ்தவம், முஸ்லிம் மத குருமார்களும் அழைக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால் அப்படி அழைக்கப்பட்டதாகத் தெரியவில்லை.

அத்துடன், இதில் கலந்துகொண்ட பௌத்த பிக்குகள் எந்தவித ஆதாரங்களும் இன்றி வெறுமனே கொரோனாவை கட்டுப்படுத்திவிட்டார்கள் என்ற விதத்தில் அரசாங்கத்தை வரவேற்பதை அவதானிக்க முடிந்தது.

இந்தக் கூட்டத்தில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, கேட்பாரற்று வந்து இருந்துவிட்டுச் சென்றதையும் காணக்கூடியதாக இருந்தது.

ஒரு அவசரகால நடவடிக்கைகளுக்குத் தேவையில்லாதவர்களுக்கு கூட்டங்களில் கலந்துகொள்வதற்கு அனுமதி வழங்குவது சந்தேகத்தை ஏற்படுத்துகிறது.

பிக்குகளை வைத்து தேர்தல் வியூகம் வகுக்கப்படுகிறதா? அதற்காகத்தான் பிக்குகள் முன்னிலைப் படுத்தப்படுகின்றார்களா?” என அவர் சந்தேகம் வெளியிட்டுள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.