ஈஸ்டர் தாக்குதல் சூத்திரதாரி சஹ்ரான் கும்பலில் மனித வெடிகுண்டுகளாக பல அநாதைப் பிள்ளைகள் – சி.ஐ.டி. விசாரணையில் அரபுக் கல்லூரி மாணவர்கள் அதிர்ச்சித் தகவல்

இலங்கையில் கடந்த வருடம் உயிர்த்த ஞாயிறு தினத் தற்கொலைத் தாக்குதல்களின் பிரதான சூத்திரதாரியாகச் செயற்பட்டார் என நம்பப்படும் சஹ்ரான் ஹாசீமின் கும்பல்,  புத்தளம் – வனாத்துவில்லுவில் பகுதிகளில், பெற்றோரை இழந்த அநாதரவான பிள்ளைகளுக்கு ஆயுதப் பயிற்சி வழங்கி, அவர்களை மனித வெடிகுண்டுகளாக சமூகமயப்படுத்தத் திட்டமிட்டிருந்தது என்று குற்றப் புலனாய்வுத் திணைக்கள விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இதற்காக சஹ்ரானின் சகோதரனான சாய்ந்தமருதில் தற்கொலை செய்துகொண்ட ரில்வான், வனாத்துவில்லு பகுதியில் உள்ள அரபுக் கல்லூரிக்குச் சென்று ஆயுதம் மற்றும் கைக்குண்டு பயன்பாடு குறித்து பயிற்சி கொடுத்து, அந்நிய மதத்தவர்களைக் கொலை செய்ய தமக்குப் போதனை செய்ததாக அந்த அரபுக் கல்லூரி மாணவர்கள்  சி.ஐ.டி. விசாரணைகளில் வெளிடுத்தியுள்ளனர் என்று நான்காம் மாடித் தகவல்கள் தெரிவித்தன.

இவ்வாறு 20 இற்கும் அதிகமான மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளதாக நம்பப்படும் நிலையில், அதில் 12 பேரிடம் இதுவரை சி.ஐ.டியினர் வாக்கு மூலங்களைப் பதிவு செய்துகொண்டுள்ளனர் என்று அறியமுடிந்தது.

இவ்வாறான பின்னணியிலேயே, உயிர்த்த ஞாயிறு தினத்தன்று இடம்பெற்ற தொடர் தற்கொலைக் குண்டுத் தாக்குதல்களுடன் புத்தளம் பிரதேசத்தின் அமைப்பொன்றும் தொடர்புப்பட்டுள்ளமை தொடர்பில் சி.ஐ.டி. தகவல்களை வெளிப்படுத்திக்கொண்டிருந்த நிலையில் அதன் பொறுப்பாளராகச் செயற்பட்ட நபர், கடந்த 3ஆம் திகதி கைது செய்யப்பட்டார்.

இந்தநிலையில், அவர் நடத்தி வந்த அரச சார்பற்ற நிறுவனம் ஒன்றின் அலுவலகம் ஒன்று, கொழும்பு 15, மட்டக்குளி பகுதியில் பள்ளிவாசல் ஒன்றின் 2ஆம் மாடியில் உள்ள அறையொன்றில்  இயங்கி வந்தமை கண்டறியப்பட்டுள்ள நிலையில், கடந்த 4 ஆம் திகதி சி.ஐ.டியினரால் அந்தப் பள்ளிவாசல் அறை அதிரடியாகச் சோதனைக்கு உட்படுத்தப்பட்டது.

இதன்போது அங்கிருந்து பல ஆவணங்கள்,  குறித்த அமைப்புக்கு நிதி வழங்கியவர்கள் குறித்த பற்றுச் சீட்டுக்கள் உள்ளிட்டவை சி.ஐ.டியால்  மீட்கப்பட்டன எனவும், தற்போது அவ்வறைக்கு சீல் வைக்கப்பட்டு பொலிஸ்  பாதுகாப்புப் போடப்பட்டு விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன எனவும் தெரியவந்துள்ளது.

இதில் கைதுசெய்யப்பட்ட அரச சார்பற்ற நிறுவனப் பொறுப்பாளர், பெற்றோரை இழந்த 24 பிள்ளைகளை கொழும்பிலிருந்து அழைத்துச் சென்று, குறித்த அரபுக் கல்லூரிக்குக் கையளித்துள்ளமை தொடர்பில் தகவல்கள் உள்ளன எனவும், அது குறித்து தீவிர விசாரணைகள் இடம்பெறுகின்றன எனவும் நான்காம் மாடி தகவல்கள் கூறின.

குறித்த நபரின் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் பின்னர், தற்போது வரைக்கும் 24 பிள்ளைகளில் 12 பிள்ளைகளைக் கண்டறிந்து சி.ஐ.டியினர் வாக்குமூலம் பெற்றுள்ளனர் எனவும், அவர்கள் அனைவரும் 12 முதல் 15 வயதுகளுக்கு இடைப்பட்ட சிறுவர்கள் எனவும் அந்தத் தகவல்கள் கூறின.

குறித்த அநாதரவான பிள்ளைகளுக்கு, வனாத்துவில்லு – காரைதீவு வீதியில் 6 ஏக்கர் விஸ்திரமான இடத்தில் பயிற்சிகள் வழங்கப்பட்டுள்ளன எனவும் தகவல்கள் வெளிப்படுத்தப்பட்டுள்ள நிலையில், அது குறித்த மேலதிக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

 

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.