சகல திணைக்களங்களும் உரிய சுகாதார முறையை தொடர்ந்து பின்பற்றவும்: கிளி. அரச அதிபர் வலியுறுத்து!

கிளிநொச்சி மாவட்டத்திலுள்ள சகல திணைக்களங்களும் உரிய சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி சேவைகளை வழங்க வேண்டுமென கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் ரூபவதி கேதீஸ்வரன் வலியுறுத்தியுள்ளார்.

இந்நிலையில் எதிர்வரும் திங்கட்கிழமை முதல் ஊடரங்குச் சட்டம் தளர்த்தப்பட்டு இயல்புநிலை ஏற்படுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் கிளிநொச்சி மாவட்டத்தில் அரச திணைக்களங்களை இயங்கவைப்பது தொடர்பான கூட்டம் மாவட்ட அரச அதிபர் ரூபவதி கேதீஸ்வரன் தலைமையில் இன்று (வியாழக்கிழமை) காலை நடைபெற்றது.

இதில், கரைச்சி, கண்டாவளை, பூநகரி, பச்சிலைப்பள்ளி ஆகிய பிரதேச செயலாளர்கள், கிளிநொச்சி மாவட்ட பொதுவைத்தியசாலையின் பொறுப்பு வைத்திய அதிகாரி மற்றும் திணைக்களத் தலைவர்கள், பொலிஸ் அதிகாரி உள்ளிட்டோர் கலந்துகொண்டிருந்தனர்.

கூட்டத்தின் போது கருத்துத் தெரிவித்த மாவட்ட அரசாங்க அதிபர், ஊடரங்கு வேளைகளில் உரிய நடைமுறைகளையம் சமூக இடைவெளியையும் தனிநபர் சுகாதாரத்தையும் பேணி அனைத்துத் தரப்பினரும் ஒத்துழைப்புக்களை வழங்கியிருந்தனர்.

எதிர்வரும் திங்கட்கிழமை முதல் இதேபோன்று சமூக இடைவெளி, தனிநபர் சுகாதாரம், பொதுச் சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி பொதுமக்களுக்கான சேவைகளை வழங்குவதற்கு அனைவரும் ஒத்துழைக்க வேண்டுமென அரச அதிபர் கேட்டுக்கொண்டார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.