மேல் மாகாணத்தில் சிக்கியுள்ளவர்களில் மேலும் 1200 பேர் சொந்த இடங்களுக்கு அனுப்பிவைப்பு

கொரோனா வைரஸ் தொற்று நெருக்கடி நிலையில் பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கு காரணமாக மேல் மாகாணத்தில் சிக்கியுள்ளவர்களை சொந்த இடங்களுக்கு அனுப்பும் பணிகள் இடம்பெற்றுவருகின்றன.

அந்தவகையில், தமது இருப்பிடங்களுக்குச் செல்லமுடியாமல் மேல் மாகாணத்தில் சிக்கியுள்ளவர்களில் மேலும் 1200 பேர் நேற்று (வியாழக்கிழமை) சொந்த இடங்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டனர்.

ஏற்கனவே, நுகேகொடை பொலிஸ் வலயத்தில் 600 பேர் வரை கடந்த 5 ஆம் திகதி அவர்களது சொந்த இடங்களுக்கு அனுப்பிவைக்கப்பட்ட நிலையில், அதே பொலிஸ் வலயத்திலிருந்து நேற்று 1200 பேர் சொந்த இடங்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர்.

23 மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் இலங்கை போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான பேருந்துகளில் அனுப்பிவைக்கப்பட்டதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர், பொலிஸ் அத்தியட்சகர் ஜாலிய சேனாரத்ன தெரிவித்தார்.

ஏற்கனவே முதற்கட்டமாக மேல் மாகாணத்தின் களனி பொலிஸ் பிரிவில் இவ்வாறு சொந்த இடங்களுக்கு செல்ல முடியாமல் இருந்த 370 பேர் கடந்த சனிக்கிழமை 2 ஆம் திகதி பொலிஸ் பாதுகாப்புடன் அனுப்பப்பட்டனர்.

மேல் மாகாண ஆளுநர் ரொஷான் குணதிலகவின் திட்டத்தின் பிரகாரம், மேல் மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னக்கோனின் வழி நடத்தலில் இந்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.